உள்நாடு

நிந்தவூரில் “வளிமண்டலவியல் ஓர் அறிமுகம்” நூல் வெளியீட்டு விழா

ஓய்வு பெற்ற சிரேஷ்ட வானிலை அதிகாரியும், ஊடகவியலாளருமான கலாநிதி முகம்மட் சாலிஹீன் எழுதிய “வளிமண்டலவியல் ஓர் அறிமுகம்” எனும் நூலின் வெளியீட்டு விழா நேற்று நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.

அறிவியல் மற்றும் கல்வி ஆர்வலர்கள், பேராசிரியர்கள், புத்திஜீவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வில், நூல் குறித்து விரிவான நூல் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. வளிமண்டலவியல் தொடர்பான அடிப்படை கருத்துக்களை எளிமையாகவும், அறிவியல் துல்லியத்துடனும் எடுத்துரைக்கும் இந்த நூல், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொது வாசகர்கள் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக பேராசிரியர்கள் இங்கு கருத்துத் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம்.ஏ.எம். தாஹிர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நூலை வெளியிட்டு வைத்ததுடன், நூலாசிரியரான கலாநிதி முகம்மட் சாலிஹீனைப் பாராட்டி உரையாற்றினார்.

அவர் தனது உரையில், அறிவியல் நூல்களை தாய்மொழியில் வெளியிடுவது சமூகத்தின் அறிவுத்தள வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் எனக் குறிப்பிட்டார்.

வளிமண்டலவியல் துறையில் நீண்ட கால அனுபவமும், ஆய்வுப் பங்களிப்புகளும் கொண்ட கலாநிதி முகம்மட் சாலிஹீனின் இந்த நூல், இலங்கைத் தமிழ்ச் சூழலில் ஒரு முக்கிய அறிவியல் ஆவணமாகக் கருதப்படுவதாக நிகழ்வில் பங்கேற்றோர் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் எம்.ஐ.எம். கலீல், புவியியல் துறைத் தலைவர் கலாநிதி ஐ.எல். மொஹமட் ஜாஹிர், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். ஹனீபா உட்பட ஊடகவியலாளர்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

(மேஜர் துவான் ஷஹி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *