உள்நாடு

புத்தளம் பாத்திமாவின் 64 ஆவது கல்லூரி தினத்தில் கௌரவிக்கப்பட்ட ஓய்வாளர்கள்

புத்தளம் பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தின் 64 வது கல்லூரி தினத்தினை முன்னிட்டு, 1962 பாடசாலை ஆரம்பித்தது முதல், எக்காலத்திலாயினும் நற்பணியாற்றி தற்பொழுது பணிநிலை ஓய்வு பெற்றிருக்கும் அதிபர்கள்,ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், சிற்றூழியர்கள் என சுமார் 80 பேர் கலந்து கொண்ட ஒன்று கூடல் திங்கட்கிழமை (02) மனோரம்மியமான மாலைப் பொழுதில் திறந்த வெளியில் பாடசாலையின் அதிபர் சரீனா அஜ்மல் தலைமையில் இடம் பெற்றது.

பாடசாலை சமூகத்தின் அழைப்பை ஏற்று வந்த பணிப்பூக்கள் பாடசாலையின் அதிபர், முகாமைத்துவ குழுவினர், மற்றும் அனைத்து ஆசிரியர்களாலும் முகமன் கூறி வரவேற்றதுடன் பாடசாலையின் மாணவத் தலைவர்களால் 64வது அகவை சின்னங்களை அணிவித்தும், மலர்க்கொத்துக்களை வழங்கி, பேன்ட் வாத்தியங்கள் முழங்க பணிப்பூக்கள் கௌரவமாக அழைத்து வரப்பட்டனர்.

பணிநிலை ஓய்வடைந்த பணிப்பூக்கள் இளம் ஆசிரியர்கள் போல், பூரிப்பால் ஏற்பட்ட உணர்வு பரிமாற்றங்களுடன் பொன்மாலைப் பொழுதை கழித்த விதம் எண்ணிலடங்காத சந்தோஷமாக காணப்பட்டது.வடக்கு,மேற்கு,கிழக்கு மாகாணம் உட்பட்ட நாட்டின் நாலாபுறங்களிலிருந்தும் அழைப்பை கண்டவுடன் ஆர்வத்துடன் வருகை தந்திருந்தனர்.

இளம் ஆசிரியர்கள் போல் சந்தோஷமாக இந்நிகழ்வில் கலந்துக்கொண்டதுடன் தற்போதைய ஆசிரியர்களால் வழங்கப்பட்ட நிகழ்ச்சிகளிலும் மிகவும் சந்தோஷமாக கலந்துக்கொண்டனர்.

இச்சந்தர்ப்பத்தில் சமூகத்தை விட்டு பிரிந்த பணிப்பூக்களுக்காகவும் பாடசாலையின் அபிவிருத்திக்காகவும் , பாடசாலையில் கடமையாற்றுவோருக்காகவும் துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.

இப்பணிப்பூக்களின் ஒன்றித்த பயணம் பல்வேறு வேலைத்திட்டங்களுடன் எதிர்காலத்தில் தொடரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *