வேற்றுமைகளைக் கடந்து’நாம் இலங்கையர்’ என்ற ஒற்றை அடையாளத்துடன் கைகோர்ப்பதே நாம் தாய்நாட்டிற்குச் செய்யும் உண்மையான கௌரவம்..! -சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் ஆதம்பாவா எம்.பி.
இலங்கைத் திருநாட்டின் 78ஆவது சுதந்திர தினத்தை பெருமிதத்துடன் கொண்டாடும் இவ்வேளையில், திகாமடுல்ல மாவட்ட மக்களுக்கும் எமது தேசத்தின் அனைத்து பிரஜைகளுக்கும் எனது மனமார்ந்த சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கரையோரப் பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவை உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்கள் நாட்டின் 78ஆவது
சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஜனாதிபதி அவர்களினதும், பிரதமர் அவர்களினதும் தீர்க்கதரிசனமான தலைமைத்துவத்தின் கீழ், சவால்கள் நிறைந்த காலப்பகுதியைக் கடந்து, பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் எமது நாடு ஒரு புதிய விடியலை நோக்கிப் பயணிக்கின்றது.
இத்தருணத்தில், தேசிய ஒருமைப்பாட்டையும் சகவாழ்வை பலப்படுத்துவது நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
திகாமடுல்ல மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராகவும், கரையோரப் பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவராகவும், எமது பிராந்தியத்தின் நீண்டகாலத் தேவைகளை நிவர்த்தி செய்வதிலும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும் நான் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றேன்.
அரசாங்கத்தின் அபிவிருத்தி இலக்குகளை எமது பிரதேசத்தின் மூலைமுடுக்குகளுக்கெல்லாம் கொண்டு சேர்த்து, பாகுபாடற்ற ஒரு சுபீட்சமான எதிர்காலத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைவோம்.”பல்லின மக்கள் வாழும் எமது தேசத்தில், வேற்றுமைகளைக் கடந்து நாம் ‘இலங்கையர்’ என்ற ஒற்றை அடையாளத்துடன் கைகோர்ப்பதே நாம் தாய்நாட்டிற்குச் செய்யும் உண்மையான கௌரவமாகும்.”
இந்த 78ஆவது சுதந்திர தினத்தில், அமைதி, சுபீட்சம் மற்றும் இனங்களுக்கிடையிலான பலமான புரிந்துணர்வு எமது தேசத்தில் நிலைத்திருக்கப் பிரார்த்திக்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
