இலங்கை மின்சார சபை கலைப்பு. விரைவில் உத்தியோகபூர்வ அறிவிப்பு.
இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
அதற்கமைய, இந்த மாத இறுதிக்குள் இலங்கை மின்சார சபையை கலைப்பது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் பணி 5 கட்டங்களாக முன்னெடுக்கப்படுவதுடன், அவற்றில் 4 கட்டங்கள் ஏற்கனவே வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.
அடிப்படை ஒதுக்கீட்டுத் திட்டம், வருடாந்த மின் கொள்முதல் திட்டம், நீண்ட கால மின் உற்பத்தித் திட்டம் மற்றும் நீண்ட கால மின் விநியோக மேம்பாட்டுத் திட்டம் ஆகிய கட்டங்கள் இவ்வாறு நிறைவடைந்துள்ளதாக மின்சார சபை மாற்றத்திற்கான செயலணியின் தலைவர் புபுது நிரோஷன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இதன் இறுதிக்கட்டமான தேசிய மின்சாரக் கொள்கை மற்றும் தேசிய மின்சாரக் கட்டணக் கொள்கையைத் தயாரிக்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அதனை பெப்ரவரி மாதம் மூன்றாவது வாரத்திற்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, பெப்ரவரி மாத இறுதிக்குள் இலங்கை மின்சார சபையைக் கலைப்பதற்கான திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.
இந்த மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ், விருப்ப ஓய்வு (VRS) பெற விண்ணப்பித்தவர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகளும் இதற்கமைய மேற்கொள்ளப்படவுள்ளன.
மின்சார சபையின் 2,173 ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்திருந்ததுடன், அவர்களில் 20 பேர் தமது விண்ணப்பங்களை மீளப் பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துள்ளனர்.
அதன்படி, 2,153 ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
