கல்வி சீர்திருத்தங்களை ஜனாதிபதியே ஒத்தி வைத்தார், இது ஒத்தி வைக்கப்பட்டமைக்கு எதிர்க்கட்சி மீது குற்றம் சுமத்துவது அடிப்படையற்றது ; எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச
Smart board, computers இல்லாத பாடசாலைகளுக்கு பிரபஞ்சம் வேலைத்திட்டம் ஊடாக அவற்றைப் பெற்றுக் கொடுத்து, ஆங்கிலம், ஹிந்தி, சீனம், ஜப்பான் உள்ளிட்ட மொழிகள் போன்றே, STEAM education களில் கூடிய அவதானம் செலுத்தி செயற்பட வேண்டும் ஆரம்பத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியே தெரிவித்து வந்தது.
இவ்வாறான பின்னனியில் கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதை எந்த வகையிலும் எதிர்க்கட்சி தடுத்து நிறுத்தவில்லை. பாட உள்ளடக்கங்கள் தயாரிப்பிலும், அது குறித்த தீர்மானங்கள் எடுக்கப்பட்ட சந்தர்ப்பங்களிலும் எதிர்க்கட்சியின் எவ்வித பங்களிப்பும் இல்லாத நிலையில், சீர்திருத்தங்கள் ஒத்தி வைக்கப்பட்டமைக்கு ஐக்கிய மக்கள் சக்தியான நாமே காரணம் எனக் கூறுவது அடிப்படையற்றதாகும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கல்வித் துறை நிபுணர்கள் மற்றும் இதனுடன் தொடர்புடைய தரப்பினர்களுடன் நேற்று (24) நடைபெற்ற சந்திப்பின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் இங்கு நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.
முறையாக இதனை முன்னெடுக்க வேண்டுமானால் Green Paper, White Paper களை முன்வைத்து இந்நடவடிக்கைகளை முன்தொடருமாறு ஐக்கிய மக்கள் சக்தியே கோரியது. கல்விச் சீர்திருத்தங்களை முதலில் நாமே முன்வைத்தோம். அந்த வகையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதனை மீளப்பெறுமாறோ அல்லது நடைமுறைப்படுத்த வேண்டாம் என்றோ நாம் கூறவில்லை. கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் தடையாகவுள்ளதாகக் கூறப்படுவது நம்பக் கூடிய விடயமல்ல. நாட்டில் கல்விச் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவே எதிர்க்கட்சியாக இருந்தாலும் பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் ஊடாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்கு நவீன ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கிக் கொண்டிருக்கின்றோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஆசிரியர்களுக்கான பயிற்சி வழங்குவதில் காணப்படும் பிரச்சினைகள், தொழில்நுட்ப பிரச்சினைகள் போன்றவற்றைத் தவிர்த்து, 2027 ஆம் ஆண்டுக்குள் இந்த விடயங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் ஜனாதிபதியே முடிவை எடுத்தாரே தவிர, எதிர்க்கட்சி இந்த விடயங்களில் ஈடுபடவில்லை.
கல்விச் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் என்பதில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தோம்.
எதிர்க்கட்சியால் கல்வி சீர்திருத்தம் நடைமுறைப்படுத்துவதை நிறுத்த முடியுமா? அதிபர்கள், ஆசிரியர்கள் அல்லது மாணவர்களை வீதிக்கு இறக்கி, இவற்றை எதிர்க்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை. நாம் அவ்வாறு ஒருபோதும் செய்யவுமில்லை. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவரது முகநூல் பதிவில் கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் குறிப்பிட்டிருக்கின்றார். அதில் தரம் 6க்கான சீர்திருத்தங்கள் ஒத்தி வைக்கப்படுவதாகவும் அவரே தெரிவித்துள்ளார். எனவே சீர்திருத்தங்களை ஒத்தி வைத்தது நாம் அல்ல, ஜனாதிபதியே என்பதை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். அவை காலம் தாழ்த்தப்பட்டுள்ளமைக்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆரம்பத்திலிருந்தே இதனை முறையாக முன்னெடுத்திருந்தால் இன்று இந்த தீர்மானத்தை எடுக்க வேண்டியேற்பட்டிருக்காது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தரம் 6 ஆங்கில பாட விடயதான தயாரிப்பு பணிகளில் எதிர்க்கட்சி உறுப்பினர்களோ எனது அதிகாரிகள் குழுவோ பங்கேற்கவில்லை. Buddy net தொடர்பில் புதிதாக ஒன்றையும் கூறவேண்டியதில்லை. இந்த வலைத்தளத்துடன் பாட அலகுகளை உருவாக்கும் செயற்பாட்டில் எதிர்க்கட்சி ஈடுபடவில்லை. இது தயாரிக்கப்படும் போது 12 சந்தர்ப்பங்களில் மீளாய்வுக்குட்படுத்தப்படுகின்றன. அவ்வாறிருந்தும் பொறுத்தமற்ற ஒரு இணையதளத்தின் முகவரி எவ்வாறு பாட நூலில் உள்ளடக்கப்பட்டது? இதற்கும் எதிர்க்கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனும் போது எவ்வாறு சீர்திருத்தங்கள் எம்மால் தடைபட்டுள்ளதாகக் கூற முடியும்? எனவே இதனை பெற்றோர் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
இந்த தவறைத் தான் நாம் சுட்டிக்காட்டினோம். அதனைவிடுத்து சீர்திருத்தங்களை நிறுத்துமாறு நாம் கோரவில்லை. ஜனாதிபதி இது தொடர்பில் ஆராய்ந்த சமயத்தில் இன்னும் பல குறைபாடுகள் இதில் காணப்பட்டதனால், இந்த சீர்திருத்த நடவடிக்கைகளை ஒருவருடத்திற்கு காலம் தாழ்த்துவதாக அறிவித்து விட்டு, எதிர்க்கட்சி தான் இதற்கு காலணம் என்ற வகையில் சமூக ஊடகங்களில் பொய்களைப் பரப்பினார்.
எதிர்க்கட்சி தான் இந்த சீர்திருத்தங்களை நிறுத்தியது என்று அரசாங்கம் கூறினால், அது ஜனாதிபதி மற்றும் பெரும்பான்மையைக் கொண்ட அரசாங்கத்தை விட எதிர்க்கட்சிக்கு அதிக அதிகாரம் இருப்பதைக் காட்டுகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தேர்தல் மேடைகளில் நாம் ஆங்கில மொழிக் கல்வி மற்றும் தகவல் தொழிநுட்பக் கல்வி தொடர்பில் பிரஸ்தாபித்த போது. மக்கள் எம்மை நம்பாமல் தற்போதைய அரசாங்கத்திற்கு வாக்களித்தனர். ICT பாட அலகை நாம் 06 தரத்தில் இருந்தே இங்கு ஆரம்பிக்கிறோம். உலக நாடுகளில் K to 12 வரை ICT கற்பிக்கப்பட்டு வருகின்றன. நமது நாட்டில் 6 ஆம் தரம் முதலே ICT கற்பிக்கப்படுகிறது. இது தவறான நடவடிக்கையாகும். தகவல் தொழில்நுட்பப் பாடங்களைக் கற்பிக்கப் போதுமான வளங்களும் வசதிகளும் கிராமப் புற பாடசாலைகளில் இல்லை. இங்கு வளப் பற்றாக்குறை ஏற்பட்டு, கல்வியில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.



