இடைக்கிடையே மழை பெய்யலாம்
கிழக்குத் திசைக் காற்றழுத்தச் சுழற்சியின் காரணமாக, நாட்டின் வானிலையில் தாக்கம் ஏற்படுவதால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் நாட்களிலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அந்த திணைக்களம் இன்று (16) அதிகாலை விடுத்துள்ள வானிலை அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு, வட-மத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மத்திய மலை நாட்டின் கிழக்குச் சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வட-மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும், மணிக்கு சுமார் 30-40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் அதிகாலை நேரங்களில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
