உள்நாடு

நிவாரணங்களை வழங்க உடனடியாக தலையிடவும்; கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மற்றும் ஆபத்தில் உள்ள மாவட்டங்களுக்கு உடனடியாக சென்று பார்வையிடுமாறு மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளார். 

நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால பேரிடர் நிலைமை மற்றும் நிவாரண சேவைகள் குறித்து ஆராய்வதற்காக இன்று (27) காலை நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற சிறப்புக் கலந்துரையாடலில் பங்கேற்றபோது ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் அனைத்து பகுதியிலும் உள்ள ஆபத்து நிலைமை மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சாத்தியமான பேரழிவுகளை அடையாளம் காணவும், மக்களுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் நிவாரணங்களை வழங்க உடனடியாக தலையிடவும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தினார்.

இதேவேளை, இன்று 02.00 மணிக்கு கட்சி தலைவர்களுக்கிடையேயான ஒரு கலந்துரையாடல் இடம்பெறவிருப்பதாகவும் அதில் மேலதிக விடயங்கள் குறித்த கலந்துரையாடல் இடம்பெறும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். 

மக்களின் பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதாரம் உள்ளிட்ட நிவாரண சேவைகளை தொடர்ந்து வழங்குவது குறித்து நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது. உயர்தரப் பரீட்சை நடத்துதல் மற்றும் தொடர்ச்சியான கல்வி நடவடிக்கைகள் குறித்தும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து தங்குமிடங்களை இழந்து முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் தஞ்சமடைந்துள்ள மக்களுக்கு உலர் உணவு, அத்தியாவசிய தேவையுடைய பொருட்களையும் வழங்க வேண்டிய ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் தெரிவித்தார்.

நீர்ப்பாசன அமைப்பு மற்றும் அதன் பாதுகாப்பு குறித்தும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதுடன் கனமழை ஏற்பட்டால் நீர்ப்பாசன முறையை நிர்வகிக்க அதை உன்னிப்பாக ஆய்வு செய்யவும் மகாவலி மற்றும் நீர்ப்பாசன துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மேலும் அறிவுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *