மருத்துவர்களின் போராட்டம் ஒத்திவைப்பு
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் இன்று காலை 08 மணி முதல் ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டிருந்த பணி புறக்கணிப்பு போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோருடன் நேற்றிரவு இடம்பெற்ற கலந்துரையாடலில் சாதகமான பதில் கிடைத்துள்ளதால், பணி புறக்கணிப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, அரச மருத்துவர்கள் அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி இன்று காலை 08 மணிக்கு ஆரம்பிக்கப்படவிருந்த பணிபுறக்கணிப்பு போராட்டம் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எனினும் இன்று நண்பகல் 12 மணிக்கு முன்னர் அமைச்சர் மற்றும் துறைசார் அதிகாரிகளுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடு தொடர்பில் எழுத்துமூலம் உறுதிப்பாடு கிடைக்காவிடில் பணி புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
மருத்துவர்களின் முறையற்ற இடமாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் இன்று அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

