ரபியுனில் ஆகிர் மாதம் இன்று இரவு முதல் ஆரம்பம்
ஹிஜ்ரி 1447 ரபியுனில் ஆகிர் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு நேற்று திங்கட்கிழமை (22) மாலை மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் பிறைக்குழு தலைவர் அஸ்ஸெய்க் ஹிஸாம் அல் பத்தாஹி தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது நாட்டின் எப்பாகத்திலும் ரபியுனில் ஆகிர் மாதத்திற்கான தலைப்பிறை தென்படாத காரணத்தினால் ரபிஉல் அவ்வல் மாதத்தை இன்று 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 30ஆக பூர்த்தி செய்து நாளை மாலை மஹ்ரிபு தொழுகையுடன் ரபியுனில் ஆகிர் மாதம் ஆரம்பமாவதாக பிறைக்குழு தலைவர் அஸ்ஸெய்க் ஹிஸாம் அல் பத்தாஹி நாட்டு மக்களுக்கு உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.
கொழும்பு பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பிறை பார்க்கும் மாநாட்டில் பெரிய பள்ளிவாசலின் தலைவர் தாஹிர் ரசீன் , அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையின் பிரதிநிதி மௌலவி அஸ்ஸெய்க் எம்.எஸ்.எம். தாசிம், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வக்பு பிரிவு பொறுப்பாளர் ஏ.எஸ்.எம்.ஜாவித், பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள், பிறைக் குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை உறுப்பினர்கள், ஏனைய பள்ளி வாசல்கள், ஸாவியாக்கள், தரீக்காக்களின் பிரதிநிதிகள், மேமன் சங்க பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.





(ஏ.எஸ்.எம். ஜாவித்)