கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கிளினிக் மற்றும் கட்டண விடுதிக் கட்டிடம் சுகாதார அமைச்சரினால் திறந்து வைப்பு
சுகாதார சேவை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் முகமாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சு பல சுகாதார மேம்பாட்டுத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது இதற்கமைய கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட கிளினிக் மற்றும் கட்டண விடுதி வாளக கட்டிடம் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களினால் நேற்று (18)திறந்து வைக்கப்பட்டது.
வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஐ.எம்.எம்.றிபாஸ் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி நந்தலால் விஜயசேகர பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸ,பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா,வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எப்.ரகுமான்,பிரதி வைத்திய அத்தியட்சகர் ஏ.ஆர்.எம்.ஹாரீஸ்,திட்டமிடல் வைத்திய அதிகாரி ஏ.எல். பாரூக்,வைத்தியர்கள்,தாதியர்கள், வைத்தியசாலையின் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மூன்று மாடிகளைக்கொண்ட இக்கட்டிடம் சுகாதார அமைச்சின் 150 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இக்கட்டிடத் தொகுதியில் க்ளினிக் பிரிவு கட்டண விடுதி மற்றும் கூட்ட மண்டபம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் சுகாதார அமைச்சர் வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை கேட்டறிந்து கொண்டதுடன் அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்
அத்துடன் நோயாளர் விடுதிகளுக்கு சென்று நோயாளர்களின் நலன்களை கேட்டறிந்து கொண்டதுடன் வைத்திய சேவை தொடர்பில் நோயளர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்டார்.



(எம்.என்.எம். அப்ராஸ்)