கொழும்பு மத்திய பேருந்து நிலைய நவீனமயமாக்கல் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்.
கொழும்பு மத்திய பேருந்து நிலைய நவீனமயமாக்கல் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம் “Clean Sri Lanka ” திட்டத்துடன் இணைந்ததாக கொழும்பு மத்திய பேருந்து நிலைய நவீனமயமாக்கல் திட்டம் இன்று (15) காலை ஜனாதிபதி அநரகுமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
“வளமான நாடு – அழகான வாழ்க்கையை” உருவாக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு இணங்க, “Clean Sri Lanka ” திட்டத்தின் கீழ் 425 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி இந்த நவீனமயமாக்கல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
60 ஆண்டுகளில் இந்த பேருந்து நிலையம் முழுமையாக மூடப்பட்டு அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன மற்றும் கவர்ச்சிகரமான பேருந்து நிலையமாக முழுமையாக அபிவிருத்தி செய்யப்படும் முதற் சந்தர்ப்பம் இது என்பது விசேட அம்சமாகும்.
இலங்கை விமானப்படையின் நேரடி ஆளணி பங்களிப்பு மற்றும் கொழும்பு மாநகர சபை, இலங்கை மின்சார சபை , தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை ,வீதி அபவிருத்தி அதிகார சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட ஏனைய தொடர்புடைய நிறுவனங்களின் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் தேசிய புத்திஜீவிகள் அமைப்பு (NIO Engineering) உள்ளிட்ட அமைப்புகளும் இதில் தன்னார்வமாக பங்கேற்கின்றன.இந்த திட்டம் 2026 ஏப்ரல் மாதத்தில், சிங்கள-தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்தாமல் ஒரு நாடு வளர்ச்சியடைய முடியாது என்று கூறினார். பொதுப் போக்குவரத்து என்பது ஒரு நாட்டின் பொருளாதார செயல்முறையின் முக்கிய பகுதியாகும் என்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர், மக்களுக்கு வசதியான மற்றும் குறைந்த செலவுள்ள பொதுப் போக்குவரத்து சேவையை வழங்குவதன் மூலம் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி இலக்குகளை அடைவதை விரைவுபடுத்த முடியும் என்று தெரிவித்தார்.
நினைவுப் பலகையைத் திறந்து வைத்து கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தின் புனரமைப்புப் பணிகளைத் தொடங்கி வைத்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அந்த வளாகத்தை சுற்றிப் பார்வையிட்டார்.
பிரதி சபாநாயகர் மொஹமட் ரிஸ்வி சாலி, நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக்க, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மேல் மாகாண ஆளுநர் ஹனிப் யூசுப், கொழும்பு மேயர் வ்ராய் கெலீ பல்தசார், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்தா மற்றும் முப்படைகளின் சிரேஸ்ட அதிகாரிகள் குழு, கிளீன் ஸ்ரீலங்காசெயலக அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.




