ஜனாதிபதி தலைமையில் ஹம்பாந்தோட்டையில் இவ்வருட தேசிய மீலாத் விழா..!
புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அமைச்சின் கீழுள்ள முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடாத்தப்படும் தேசிய மீலாதுன் நபி தின நிகழ்வு எதிர்வரும் செப்டெம்பர் 05 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை மாவட்டம், அம்பலாந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட போலான கிராமத்தின் மஸ்ஜிதுல் அரூஸிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் அதிமேதகு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பான கூட்டம் ஒன்று நேற்று முன்தினம் (11) தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் தலைமையில் ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் ஹம்பாந்தோட்டை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நிஹால் கலப்பத்தி, மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்கம் இல்யாஸ், முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர்கள், ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் தேசிய மீலாத் நிகழ்வு இடம்பெறவுள்ள போலான மஸ்ஜிதுல் அரூஸிய்யா ஜும்ஆ பள்ளிவாசலுக்கு சென்று கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது
இவ்வருடம் தேசிய மீலாதுன் நபி தின நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் ஹம்பாந்தோட்டை மஸ்ஜிதுல் அரூஸிய்யா ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற உள்ளது
(ரிஹ்மி ஹக்கீம், கம்பஹா மாவட்ட நிருபர்)