இலங்கை வந்தது இந்திய கடற்படைக் கப்பலான ‘INS Rana’..!
இந்திய கடற்படைக் கப்பலான ‘INS Rana’ திங்கட்கிழமை ( 11) காலை திருகோணமலை துறைமுகத்தை உத்தியோகபூர்வ விஜயத்திற்காக வந்தடைந்ததுடன், கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினர் அக் கப்பலை வரவேற்றனர்.
திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ள Destroyer வகைக்குரிய ‘INS Rana’ என்ற கப்பல் 147 மீட்டர் நீளம் கொண்டதுடன், 300 பேரினை கொண்ட அங்கத்துவ குழுவினரைக் கொண்டுள்ளது, மேலும் இந்தக் கப்பலின் கட்டளை அதிகாரியாக கேப்டன் கே பீ சிறீசன் கடமையாற்றுகின்றார்.
‘INS Rana’ கப்பல் தீவில் தங்கியிருக்கும் போது, இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே நல்லுறவை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படை ஏற்பாடு செய்யும் பயிற்சி மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளில் அதன் குழுவினர்கள் பங்கேற்பார்கள், அத்துடன் தீவில் உள்ள பல சுவாரஸ்யமான இடங்களைப் பார்வையிடவும் திட்டமிட்டுள்ளனர். கூடுதலாக, இலங்கை ராணுவ வீரர்களுக்காக ‘INS Rana’கப்பலில் ஒரு யோகா நிகழ்ச்சியை நடத்துவதற்கும், திருகோணமலையில் உள்ள சிறப்பு படகுப் படை தலைமையகத்திலும் கப்பலிலும் பயிற்சி நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
மேலும், ‘INS Rana’ கப்பல் தனது உத்தியோகபூர்வ சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, 2025 ஆகஸ்ட் 14 அன்று தீவிலிருந்து புறப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)








