புதிதாக பதவியேற்றுள்ள நடிகர் கமல்ஹாசன், கவிஞர் சல்மா உள்ளிட்ட 4 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!
நடிகர் கமல்ஹாசன், கவிஞர் சல்மா உள்ளிட்ட 4 மாநிலங்களவை எம்.பி.க்கள் புதியதாக பதவியேற்றுள்ளனர். இவர்கள் தமிழில் உறுதிமொழி ஏற்று பதவியேற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக-வை சேர்ந்த முகமது அப்துல்லா, சண்முகம், பி.வில்சன், அதிமுக-வைச் சேர்ந்த சந்திரசேகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகிய 6 பேரின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. முன்னதாக கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக சார்பில் முன்னுறுத்தப்பட்ட 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தோ்வாகினர்.திமுக கூட்டணியின் ஆதரவுடன் பி.வில்சன், சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம், மநீம தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில், இவர்கள் 6 பேரும் வெள்ளிக்கிழமை மாநிலங்களவையில் பதவி ஏற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இந்த 6 எம்.பி.க்களும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில், திமுக சார்பில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை எம்.பி.யாக தமிழில் உறுதி ஏற்று பதவி ஏற்றுக் கொண்டார். இதேபோல, திமுக சார்பில் வில்சன், சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோரும் தமிழில் உறுதி ஏற்று பதவி ஏற்றுக் கொண்டனர். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன், திமுகவைச் சேர்ந்த ராஜாத்தி(கவிஞர் சல்மா), எஸ்.ஆர். சிவலிங்கம், பி.வில்சன் ஆகிய 4 பேர் இன்று மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றனர். இதையடுத்து, அவர்கள் அனைவரும் அவையை நடத்தி வரும் துணைத் தலைவர் ஹரிவன்ஷிடம் வாழ்த்து பெற்றனர்.
“மாநிலங்களவையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கமல்ஹாசன் எனும் நான், சட்டத்தினால் நிறுவப்பட்டதான இந்திய அரசியல் சட்டத்தின் மீது உண்மையான பற்றார்வமும், பற்றுறுதியும் கொண்டிருப்பேன் என்றும் இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் உறுதியாக பற்றி நிற்பேன் என்றும் நான் இப்போது ஏற்க இருக்கும் கடமையினை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும் விழுமிய முறைமையுடன் உறுதிகூறுகிறேன்” என தமிழில் உறுதிமொழி வாசித்து பதவியேற்றுக்கொண்டனர். மற்றவர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
இதையடுத்து, கேள்வி நேரம் தொடங்கியது. எனினும், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அவை திங்கள்கிழமை காலை 11 மணிக்கு மீண்டும் கூடும். இதேபோல், மக்களவையும் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதிமுகவின் இன்பதுரை, முன்னாள் எம்.எல்.ஏ. தனபால் ஆகிய இருவரும் வருகிற ஜூலை 28ம் தேதி பதவியேற்கவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்கவுள்ள மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறிய வாழ்த்து செய்தியில்;“I belong to the Dravidian stock” எனப் பேரறிஞர் அண்ணா முழங்கிய நாடாளுமன்ற மாநிலங்களவையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாதங்களை – தமிழ்நாட்டின் உரிமைக்குரலை ஓங்கி ஒலிக்கும் நமது எம்.பி.,க்கள்!திராவிடத் தூணாக முழங்கி விடைபெற்ற அண்ணன் வைகோ அவர்களது உரையில் உள்ளம் உருகி நெகிழ்ந்தேன்!திரு.சண்முகம் – திரு.புதுக்கோட்டை அப்துல்லா ஆகியோரது பணிகளுக்குப் பாராட்டும்.எம்.பி.,யாகத் தொடரும் மூத்த வழக்கறிஞர் வில்சன், புதிய குரலாக ஒலிக்கவுள்ள அருமை நண்பர் கமல்ஹாசன், சேலம் சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோருக்கும் வாழ்த்துகள்!. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)