மாணவர்களை தொழில்துறைக்கு தயாராக்க தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பயிற்சி முகாம்
2030 மற்றும் அதன் பிந்தைய வேலைவாய்ப்புத் தேடலில் மாணவர்கள் தங்களைத் தயார் படுத்திக் கொள்ளும் வகையில், தென்கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் கணக்கியல் மற்றும் நிதித் துறையினால், CMA Sri Lanka நிறுவனத்துடன் இணைந்து சிறப்பு தொழில்துறை பயிற்சி முகாம் நேற்று (21) இடம்பெற்றது.
தென்கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா மற்றும் கணக்கியல் மற்றும் நிதித் துறையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.சி.என். ஷபானா ஆகியோரது மேற்பார்வையின் கீழ் “Industry Readiness: Future-Proofing Your Career for 2030 & Beyond” எனும் தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வு, தொழில்நுட்பவியல் பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்த பயிற்சியில் திலின பண்டார (Associate Principal Consultant – Nagarro | Certified Trainer & Industry Mentor) பேச்சாளராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். தொழில்துறையில் தனது அனுபவங்களை பகிர்ந்த அவர், தொழில் சந்தையின் எதிர்கால நிலை, வேலைவாய்ப்புக்கான திறன்கள், தொழில்முனைவர் போக்குகள் மற்றும் சவால்கள் குறித்து விரிவாக விளக்கினார்.
இம்முயற்சி, Career Development பாடநெறியின் ஒரு பகுதியாகவும், மாணவர்களுக்கு தொழில் உலகின் தேவைகளை புரிந்து கொள்ளும் ஒரு முக்கியமான தளமாகவும் அமைந்தது.
இந்த நிகழ்வில் முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, தங்களது எதிர்கால வேலைவாய்ப்பு திட்டங்களை உறுதிப்படுத்தும் வகையில் வழிகாட்டல்களை பெற்றனர்.
இத்தகைய நிகழ்வுகள், மாணவர்களின் தொழில்துறை இணைப்பு திறன்களை மேம்படுத்தும் வகையிலும், நவீன வேலைவாய்ப்பு சந்தையில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்க தேவையான மனப்பாங்கினை உருவாக்கும் வகையிலும் முக்கிய பங்காற்றுகின்றன.
நிகழ்வின்போது விரிவுரையாளர்களான கலாநிதி எம்.ஐ.எம். றியாத், எம்.பர்விஸ், ஏ.ஆர். பாத்திமா தபாணி உள்ளிட்ட பலர் பங்குகொண்டிருந்தனர்.







(நூருல் ஹுதா உமர்)