உப்பு விலை குறைவடைந்தமையினால் புத்தளம் உப்பு உற்பத்தியாளர்கள் கவலை
கடந்த காலங்களில் பெய்த கடும் மழை காரணமாக புத்தளத்தில் பாதிக்கப்பட்ட உப்பு அறுவடை, தற்போதைய வறண்ட வானிலை காரணமாக உப்பு விளைச்சல் அதிகமாகக் காணப்படுகின்ற போதிலும், உப்பின் விலை குறைந்துள்ளமை தமக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக புத்தளம் உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையின் உப்புத் தேவையில் 50 வீதம் முதல் 55 வீதம் வரை புத்தளம் மாவட்டத்தின் புத்தளம், முந்தல், மங்கள எளியா, பாலவி, தளுவ, கற்பிட்டி மற்றும் வன்னாத்தவில்லுவ ஆகிய பகுதிகளிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், தற்போது சுமார் 10,000 ஏக்கர் நிலத்தில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த உப்பு உற்பத்தியில் சுமார் 1,000 உத்தியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
குறைந்த மூலதனத்துடன், சரியான வறண்ட வானிலை நிலவும் மாதங்களில் வளமான உப்பு அறுவடையைப் பெறுவதன் மூலம் நல்ல வருமானத்தைப் பெற முடியும் என்பதன் காரணமாக உப்புத் தொழிலை ஆரம்பித்தாகவும். இருப்பினும், புத்தளம் மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழையால், உப்பு அறுவடை எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை. என்பதாகவும்
புத்தளம் மாவட்டத்தில் பெய்த மழை, நாட்டின் பிற பகுதிகளிலும் பெய்தது. இவ்வாறு நாடு முழுவதும் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டதால், இந்தியாவின் குஜராத்தில் இருந்து உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
இருப்பினும், புத்தளம் உள்ளிட்ட பல பகுதிகளில் தற்போது உப்பு அறுவடை நடைபெற்று வருகிறது. உப்பு உற்பத்தியாளர்கள் 50 கிலோ இந்திய உப்பை 4,000 ரூபாவுக்கு வாங்கும் அதே வேளையில், புத்தளத்தில் 50 கிலோ உப்பு மூட்டையின் விலை 1,800 முதல் 2,000 வரை குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்..
இதுவ விடயமாக குறித்து புத்தளம் உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரனீஸ் பதுர்தீன் கருத்து தெரிவிக்கையில் “இந்தியாவில் இருந்து உப்பு இறக்குமதி செய்ததே இலங்கையில் உப்பு விலை குறைந்தமைக்கு காரணமாகும். உப்பை இறக்குமதி செய்ய அனுமதி கேட்ட அனைவருக்கும் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால், கட்டுப்பாடுகள் இன்றி இந்தியாவில் இருந்து உப்பு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. திட்டமிட்டு உப்பை இறக்குமதி செய்திருந்தால் உள்நாட்டு உப்பு உற்பத்திக்கு ஒரு நல்ல விலை கிடைத்திருக்கும்.
இன்றும் 1,50,000 தொன்னுக்கும் மேல் உப்பு துறைமுகத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. உப்பை இறக்குமதி செய்தவர்கள் அதனை விற்க முடியாமல் தடுமாறுவதைப் பார்க்க முடிகின்றது. குறைந்த விலைக்காவது இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட உப்பை விற்பனை செய்ய வேண்டும் என்ற முயற்சியில் அவர்கள் இருக்கும் போது, எங்களது உப்பை எப்படி விற்பனை செய்வது?
புத்தளத்தில் உப்பு அறுவடை தற்போது நடைபெற்று வருகிறது. உப்பை அறுவடை செய்ய உப்பு உற்பத்தியாளர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர். நல்ல வெப்பமும் உப்பு உற்பத்திக்கு பெரும் பங்களிப்பைத் தருகிறது. ஆனால் உப்பின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி எங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், உப்பு உற்பத்தியாளர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். இதைவிட சிறந்த விலை கிடைத்தால் நல்லது என்ற நிலைப்பாட்டில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)