உலகம்

கற்பனை செய்ய முடியாத துயரம் – விமான விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த பிறகு பிரதமர் நரேந்திரமோடி உருக்கம்..! அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து ஏற்பட்ட இடத்தில் நடக்கும் மீட்பு பணிகளை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டு ஆய்வு..!

அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து ஏற்பட்ட இடத்தில் நடக்கும் மீட்பு பணிகளை வெள்ளிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, ஏர் இந்தியா விமானம் ஒன்று லண்டனுக்கு வியாழக்கிழமை மதியம் 1.39 மணிக்கு 230 பயணிகள், 10 பணியாளர்கள் மற்றும் 2 விமானிகள் என மொத்தம் 242 பேருடன் புறப்பட்டது. அந்த விமானம் வானில் பறந்த சில நிமிடங்களில், அதாவது தரையில் இருந்து 825 அடி உயரத்தை எட்டியபோது, விமானியிடம் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு ‘மே டே அழைப்பு’ எனப்படும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழ்நிலையிலான அவசர அழைப்பு வந்தது.

அதை ஏற்றுக்கொண்ட கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், மீண்டும் விமானியை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அதற்குள் விமானத்தில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. சில நிமிடங்களில் அந்த விமானம் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அதில் இருந்து எழுந்த தீப்பிழம்புகளும், கரும்புகையும் பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ளவர்களுக்கும் நன்றாக தெரிந்தது.

உடனடியாக விமான நிலைய தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தீப்பிழம்பு வந்த திசை நோக்கி விரைந்தனர். அந்த விமானம், விமான நிலையம் அருகே உள்ள மெகானி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருந்த பி.ஜே. தனியார் மருத்துவக் கல்லூரியின் விடுதிக்கட்டிடத்தில் மோதி வெடித்து சிதறி இருந்தது பின்னர் தெரியவந்தது.

விமானத்தின் வால் பகுதி, அந்த பகுதியில் இருந்த குடியிருப்பு கட்டிடத்தில் புகுந்த நிலையில் இருந்தது. மற்ற பாகங்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. எங்கு பார்த்தாலும் புகைமண்டலமாக காட்சி அளித்தது. 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள், தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தன.

பேரிடர் மீட்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விமானம் விழுந்து கிடந்த பகுதியை நெருங்குவதற்கே மீட்பு படையினர் மிகுந்த சிரமப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் ஒருபுறம் தண்ணீரை பீய்ச்சி தீயை கட்டுப்படுத்தினர். விமானத்தின் பெரும்பகுதி தீயில் முற்றிலும் எரிந்துவிட்டன.

பயணிகள் உள்பட பலர் உடல் கருகி பிணமாக கிடந்தனர். அவர்களில் பலரது உடல்கள் அடையாளம் காணமுடியாமல் இருந்தது. இந்த நிலையில் விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்ததாக ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த கோர சம்பவத்தில், விஷ்வாஸ் குமார் என்ற பயணி ஒருவர் மட்டும் உயிர் தப்பினார் என்றும், அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் குஜராத் முதல்-மந்திரி பூபேந்தர படேல் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார். விபத்து குறித்து அறிந்ததும் பிரதமர் மோடி, குஜராத் முதல்-மந்திரி பூபேந்தர படேலுடன் பேசி, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஆமதாபாத் புறப்பட்டுச் சென்றார். பின்னர் அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்திற்கு அவர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த கோர விபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டியில் பதிவாகி இருக்கும் தகவல்களை ஆராய்ந்து பார்த்தால்தான், கடைசி நேரத்தில் என்ன நடந்தது என்பதும், விபத்துக்கான காரணமும் தெரியவரும். எனவே அந்த கருப்பு பெட்டியை கைப்பற்றும் முயற்சியில் மீட்புக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

நெஞ்சை பிளக்கும் வகையில் நடந்த இந்த விமான விபத்து, நாட்டையே பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி விமான விபத்து நடந்த இடத்தை பார்வையிட வெள்ளிக்கிழமை குஜராத்தின் அகமதாபாத்திற்கு வருகை தந்தார். விமானம் உருக்குலைந்து கிடக்கும் இடத்தில் நடக்கும் மீட்பு பணிகளை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்த நபரை மருத்துவமனைக்கு சென்று பார்த்த பிரதமர் மோடி அவரிடம் நலம் விசாரித்தார். இந்த நிலையில் விமான விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி இது கற்பனை செய்ய முடியாத துயரம் என்று பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் நாம் அனைவரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். திடீரென, இதயம் உடையும் வகையில் பல உயிர்களை இழந்தது வார்த்தைகளால் விவரிக்க முடியாது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல்கள். அவர்களின் வலியை நாங்கள் புரிந்துகொள்கிறோம், மேலும் அந்த வெற்றிடம் வரும் பல ஆண்டுகளுக்கும் உணரப்படும் என்பதையும் அறிவோம். ஓம் சாந்தி.

அகமதாபாத்தில் விபத்து நடந்த இடத்தைப் வெள்ளிக்கிழமை பார்வையிட்டேன். பேரழிவு நடந்த இடம் வருத்தமளிக்கிறது. அயராது மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள் மற்றும் குழுக்களைச் சந்தித்தோம். கற்பனை செய்ய முடியாத இந்த துயரத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடன் எங்கள் எண்ணங்கள் உள்ளன. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

அவருடன் குஜராத் முதல்வர் பூபேந்தர படேல், விமான போக்குவரத்து மந்திரி ராம் மோகன் நாயுடு உள்ளனர். முன்னதாக அகமதாபாத் விமான நிலையத்தில் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி அதிகாரிகளுடன் பேசினார். விமான சேவைகள் வழக்கம் போல் செயல்படுவதாக பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் விளக்கினர்.

(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *