நீதிமன்றில் முன்னிலையான பணி நீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர்
பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனிய, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை முன்னிலையாகியுள்ளார்.
அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரை சட்டவிரோதமாக விடுவித்தது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாக பயன்படுத்தி சிறைக் கைதி ஒருவரை விடுதலை செய்தமை தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மேற்கொண்டு வரும் விசாரணைகளின் பின்னணியில், சிறைச்சாலைகள் ஆணையாளர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (09) கைது செய்யப்பட்டார்.
அவரை நேற்று செவ்வாய்க்கிழமை, புதுக்கடை இலக்கம் 01 நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதேவேளை, அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) இரவு கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து
நேற்று முன்தினம் (09) அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது அவரையும் இன்று (11) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டது.