உள்நாடு

இல்ம் குர்ஆன் மத்ரஸாவில் சிறப்பாக நடந்து முடிந்த பரிசளிப்பு விழா

பேருவளை சீனன்கோட்டை பெருகமலை இல்ம் குர்ஆன் மத்ரஸாவின் பரிசளிப்பு விழா பேருவளை ஸாரா வரவேற்பு மண்டபத்தில் (2025-05-27) ஆம் திகதி மிக விமர்சையாக நடைபெற்றது.

அதிபர் பாத்திமா ரிஸானா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக சீனன்கோட்டை அல்-ஜுமைஸரா தேசிய பாடசாலை ஆசிரியர் அஷ்ஷெய்க். எஸ்.எம்.எம் பர்ஹத் ஹுஸைன் (நளீமி) கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக இலங்கை திறந்த பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கை இளங்கலை பட்டதாரி மாணவன் ஏ.எம்.எம் ஸாஜித் (நளீமி), பெருகமலை ஸாகிரீன் மத்ரஸா அதிபர்‌ மெளலவி. எஸ்.எச்.எம் இம்ரான் (ஹுமைதி) மற்றும் அம்பேபிடிய அஸாபிரூல் ஜன்னாஹ் குர்ஆன் மத்ரஸா அதிபர் ஷகீலா ஸுபைர் பாய்ஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் மத்ரஸா சிறார்களின் பல்வேறு நிகழ்சசிகளும் மேடையேற்றப்பட்டன.

இல்ம் குர்ஆன் மத்ரஸா சிறார்களின் திறமைகளை அதிதிகள் இங்கு பாராட்டிப் பேசினர். உலகக் கல்விக்கு‌ வழங்கும் முக்கியத்துவம் ஆன்மீக கல்விக்கும் வழங்கப்பட வேண்டுமென இங்கு வலியுறுத்தப்பட்டது.

சிறார்களுக்கு, கல்வியுடன் கூடிய நல்லொழுக்க பண்பாடுகளை புகட்டி நாட்டுக்கும், சமூகத்திற்கும் ஏற்ற நற்பிரஜைகளாக உருவாக்க வேண்டுமென இங்கு உரையாற்றிய அதிதிகள் குறிப்பிட்டனர்.

இந்த மத்ரஸாவின் முன்னேற்றத்திற்காக பெற்றோர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர்.

இதில் முதல் தடவையாக 7 மாணவ, மாணவிகள் அல்குர்ஆனை சரளமாகவும், முழுமையாகவும் ஓதி மத்ரஸாவிலிருந்து வெளியேறியுள்ளனர்.

மேலும், மத்ரஸாவிலிருந்து அல்குர்ஆனை முழுமையாக கற்று விலகிச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள், விருதுகள் மற்றும் மத்ரஸா லோகோ (logo) அச்சிடப்பட்ட பைகளும் வழங்கி வைக்கப்பட்டதோடு, அதிதிகளுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

(பேருவளை பீ.எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *