பேஸா விசாக்களை முறைகேடாகப் பயன்படுத்த மாட்டோம்; பாராளுமன்ற உறுப்பினர் பஸ்மின் ஷரீப்
இம்முறை புனித ஹஜ் யாத்திரைக்காகச் செல்லப் பயன்படுத்துகின்ற பேசா விசாக்கள் எவையும் முறைகேடாக பயன்படுத்தப் படமாட்டாது என பாராளுமன்ற உறுப்பினர் பஸ்மின் ஷரீப் தெரிவித்துள்ளார்.
இம்முறை புனித ஹஜ் யாத்திரையின் பயன்படுத்தப்படும் பேசா விசாக்களை அரச தரப்பிலுள்ள எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் பயன்படுத்தப் போவதில்லை. அவை தொடர்பில் ஹஜ் குழுவிற்கோ அல்லது அது தொடர்பான எந்தவொரு அரச நிறுவனத்திற்கோ தலையீடுகளை மேற்கொள்ளப் போவதில்லை.
ஹஜ் யாத்திரிகர்கள் செல்வதற்காக வழங்கப்படும் பேசா விசாகளை கடந்த கால அரச தரப்பிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் கையாண்டதைப் போன்று இம்முறை அரச தரப்பிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் கையாளப் போவதில்லை. இது தொடர்பில் போலியான பிரச்சாரங்களை சில குறித்த எதிர்த் தரப்பு சமூக வலைத்தளங்கள் பரப்புரை செய்து வருகின்றனர்.
அதற்கு எதிராக நாங்கள் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம் என்று கண்டி மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பஸ்மின் ஷரீப் தெரிவித்தார்.
கண்டி மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பஸ்மின் ஷரீப் அவர்கள் கம்பளையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது இவ்வாறு அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
எதிர்கட்சியினர் சமூக வலைத்தளங்களில் அரச தரப்பு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசா விசாக்களைப் பெற்று புனித ஹஜ் யாத்திரைகளை மேற்கொள்ளவுள்ளார்கள் என்று போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இது உண்மைக்குப் புறம்பான செய்தியாகும்.
புத்த சாசன கலாசார மற்றும் மத அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் சினேவி அவர்கள் புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்பவர்கள் எந்தவிதமான இடையூறுகளுமின்றி சுதந்திரமாகவும் சகல வாய்ப்புக்களுடனும் தங்களுடைய கடமைகளை நிறைவேற்ற ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அதற்குரிய அதிகாரிகளுக்கும் ஹஜ் குழுவினர்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.
எனவே புனித ஹஜ் யாத்திரையினை மேற்கொள்பவர்கள் தங்களுடைய ஹஜ் கடமைகளை நிறைவேற்றி வருவதற்கு திருப்தியான முறையில் சேவையை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை எமது அரசாங்கம் இலங்கையிலுள்ள சவூதி அரேபிய உயர் ஸ்தானிகராலயத்துடன் தொடர்புகளைக் கொண்டு நடவடிகளை மேற்கொண்டு வருகின்றது.
மேலும் இதற்குத் தேவையான நடவடிக்கைகளை ஹஜ் குழுவினர் சிறந்த முறையில் மேற்கொண்டு வருகின்றார்கள். . அவர்களுக்கு எந்த விதமான அழுத்தங்களையும் எமது அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பிரயோகிக்க மாட்டார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
(இக்பால் அலி)