கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு அருகில் பொலிஸ், இராணுவ பாதுகாப்பு
உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு, கிறிஸ்தவத் தேவாலயங்களைச் சூழவுள்ள பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை விசேடப் பாதுகாப்புத் திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படைகளின் அதிகாரிகள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அனைத்து பொலிஸ் உயரதிகாரிகளுக்கும் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அண்மையில் அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார்.
பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகை தரும் தேவாலயங்களை அடையாளம் கண்டு, அவற்றைச் சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி, விசேடமாகப் பிரதான ஆராதனைகள் நடைபெறும் தேவாலயங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் எனவும் பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே உயிர்த்த ஞாயிறு தினத்தில் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நடவடிக்கையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பாதுகாப்பு செயலாளர் அண்மையில் முப்படைகளின் தளபதிகளுக்கும் அறிவுறுத்தியிருந்தார்.