பேருவளை பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சக்தியே வெல்லும்.
போனஸ் வேட்பாளர் முஹம்மது யாஸ்மீன் யாஸீன்.

பேருவளை பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சக்தியே நிச்சயமாக கைப்பற்றும் என பேருவளை அம்பேபிட்டிய வட்டார போனஸ் பட்டியல் வேட்பாளரும் பிரதேச சமூக சேவையாளருமான முஹம்மத் யாஸ்மீன் யாஸீன் கூறினார்.
பேருவளை பெருகமலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த வட்டாரத்தில் போட்டியிடும் என்டன் சுரேஷ் மற்றும் முஹம்மத் நபாயிஸ் ஆகியோரை இந்த வட்டாரத்தில் வெற்றி பெறச்செய்வதன் மூலம் தனக்கும் பிரதேச சபையில் போனஸ் ஆசனம் கிடைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது அம்பேபிட்டிய, பன்னில, கரந்தகொட, எகொடவத்தை, ஹேன மற்றும் மரக்களாவத்தை ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய இந்த வட்டாரத்தை சகல துறைகளிலும் கட்டியெழுப்பி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே எமது நோக்கமாகும்.
இந்த வட்டாரத்தில் வாழும் மூவின மக்களும் நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்து மூன்று உறுப்பினர்களை பெற்றுக்கொள்ள வேண்டும். அதனூடாக கூடுதலான சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான என்டன் சுரேஷ் மற்றும் முஹம்மத் நபாயிஸ் ஆகியோர் சமூக சேவையில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்கள் அதே போல் நானும் இன, மத, மொழி பேதமின்றி மக்களுக்காக பணி செய்துள்ளேன் தொடர்ந்தும் செய்துவருகின்றேன்.
பேருவளை பிரதேச சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் தலை சிறந்ததொரு குழு களமிறங்கியுள்ளது. பேருவளை தொகுதி அமைப்பாளர் இப்திகார் ஜெமீலின் வழிகாட்டலுடன் நாம் இத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக பாடுபட்டு வருகிறோம்.இந்த வட்டார மக்கள் என்றும் எம்முடன் கைகோர்த்துள்ளனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத்தேர்தலிலும் ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக இப்பகுது மக்கள் வாக்களித்தனர் அதற்காக நன்றி கூறுகின்றேன். இந்த தேர்தலிலும் முழுமையான ஒத்துழைப்பை வேண்டி நிற்கிறேன். எமது பகுதி மக்களுக்கு சிறந்த பல சேவைகளைப் பெற்றுக்கொடுப்போம் என்றார்.


(பேருவலை பீ.ம்.முக்தார்)