உள்நாடு

வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினைகளைக் கேட்டறிந்த எதிர்க் கட்சித் தலைவர்

தொழில் வழங்குமாறு கோரி அரசாங்கத்தை வலியுறுத்தி வேலையற்ற பட்டதாரிகள் இரண்டாவது நாளாகவும் இன்று (18) பாராளுமன்றத்திற்கு அருகிலுள்ள பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆர்ப்பாட்டம் நடந்த இடத்திற்கு இன்று காலை விஜயம் செய்தார்.

கடந்த தேர்தல் காலப் பிரிவில் வேலை வழங்குவதாக தற்போதைய அரசாங்கம் வாக்குறுதியளித்தது. என்றாலும் இதுவரை குறித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதனால் தாம் உட்பட கிட்டத்தட்ட 40,000 வேலையற்ற பட்டதாரிகள் கைவிடப்பட்டுள்ளனர் என இங்கு வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர்.

இதற்கு முன்னரும் பல தடவைகள் பாராளுமன்றத்தின் கவனத்திற் கொண்டு வந்தேன். இருந்த போதும் அரசாங்கத்திடம் இருந்தும், பொறுப்பான தரப்பினரிடமிருந்தும் இதற்கான எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். பட்டதாரிகள் தொடர்பான பிரச்சினைக்கு இன்று பதிலைப் பெற்றுத் தருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறேன். அரசாங்கம் வழங்கும் பதிலை பார்ப்போம். இதற்கு என்ன பதில் சொல்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அமைச்சர் ஹதுன்நெத்தி போலவே தற்போதைய அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தமது முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் இந்த வேலையில்லாப் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவோம் என்றும் இந்த அரசாங்க தரப்பினர் பிரஸ்தாபித்திருந்தனர். ஆனால் இதுவரையில் இது தொடர்பில் தீர்வு காணப்படவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வேலையில்லா பட்டதாரிகள் பக்கம் தான் முன்பும் இருந்ததாகவும், இன்றும் இருப்பதாகவும் நாளையும் இருப்பேன் என்றும், இந்தப் போராட்டத்தை அமைதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் முன்னெடுக்குமாறும், இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் தேவையான சகல ஆதரவையும் வழங்குவேன் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *