வைத்தியர்களின் ஒருநாள் வேலை நிறுத்தம் ஆரம்பம்; நாளைக் காலை வரை தொடரும்
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் (மார்ச் 10ஆம் திகதி) அநுராதபுரம் வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அரச வைத்தியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளளனர்.
இதன்படி, இன்று காலை எட்டு மணி முதல் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தை அரசு வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.
இந்த வேலைநிறுத்தம் நாளை, வியாழக்கிழமை, மார்ச் 13 காலை எட்டு மணி வரை தொடரும் எனவும், இது நாடு முழுவதும் உள்ள அனைத்து வைத்தியசாலைகளையும் பாதிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அவசர சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படாது என்று அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் உறுதியளித்துள்ளது.
கூடுதலாக, சிறுவர்கள் வைத்தியசாலைகள், மகப்பேறு வைத்தியசாலைகள், சிறுநீரக சிகிச்சை பிரிவுகள், தேசிய மனநல நிறுவனம் மற்றும் முப்படை வைத்தியசாலைகளுக்கு இந்த வேலைநிறுத்தம் பொருந்தாது.
இந்த விவகாரம் குறித்த கூடுதல் தகவல்கள் உரிய நேரத்தில் வழங்கப்படும் என்றுஅரசு வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இதற்கிடையில், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் மீது பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட சந்தேக நபரைக் கண்டுபிடிக்க தொடர்ச்சியான நடவடிக்கைகள் நடந்து வருவதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.