உள்நாடு

உள்ளூராட்சி தேர்தலில் ஐ.ம.சக்தியின் சிறுபான்மை கட்சிகள் தனித்துப் போட்டி

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதற்கான முஸ்தீபுகளில் இறங்கியுள்ளன.ஐக்கிய மக்கள் சக்தியின் பூரண இணக்கப்பாட்டுடன் சிறுபான்மை மக்கள் வசிக்கும் பகுதிகளில் தனித்துப் போட்டியிடுவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அக் கட்சிகளின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து கருத்துத் தெரிவித்த சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நிஸாம் காரியப்பர், ஐக்கிய மக்கள் சக்தியின் பூரண இணக்கப்பாட்டுடன் தமது கட்சி இத் தீர்மானத்துக்கு வந்துள்ளதாகவும், இதனடிப்படையில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் சகல உள்ளூராட்சி மன்றங்களிலும் தனித்துப் போட்டியிடும் முடிவெடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இதற்கமைய மாவட்ட மட்டத்தில் கட்சிப் போராளிகளைச் சந்தித்து வேட்பாளர் தேர்வுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தனித்துப் போட்டியிடுவதன் மூலம் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதிக உறுப்பினர்களை வென்றெடுப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை மனோ கணேசன் தலைமையிலான தமிழர் முற்போக்கு முன்னணியும் தத்தமது பிரதேசங்களில் தனித்துப் போட்டியிடுவதற்கான ஆரம்ப முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.கட்சி முக்கியஸ்தர்களுடன் இது குறித்த பேச்சுக்களில் ஈடுபட்டு வருவதாகவும்,விரைவில் இது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுமென்றும் குறிப்பிட்டார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இது தொடர்பாக கட்சி மட்டத்தில் பேச்சுக்களை முன்னெடுத்து வருவதாகவும் விரைவில் இது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென்றும் கட்சி முக்கியஸ்தரொருவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *