அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான குழு இன்று ஜெனீவா பயணம்
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திர சிறப்பு குழு இன்று 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஜெனிவாவுக்கு விஜயம் செய்ய உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
இலங்கைக்கு எதிரான போர் குற்றச்சாட்டுகள் குறித்து விசேட அறிக்கையை இலங்கை தரப்பு சமர்பிக்க உள்ளதுடன், சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்க புதிய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பான நீண்ட தெளிவுப்படுத்தலை முன்வைக்கவும் இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் நாளை 24 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாக உள்ளது.
இதில் பங்கேற்பதற்காக ஜெனிவா செல்லும் இலங்கையின் உயர்மட்ட இராஜதந்திர சிறப்பு குழு, 28 ஆம் திகதி வரை ஐ.நா மனித உரிமைகள் அமர்வுகளில் கலந்துக்கொள்ள உள்ளது. அத்துடன் நட்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளை பிரத்தியேகமாக சந்தித்து இலங்கை தரப்பு கலந்துரையாட உள்ளது.
மனித உரிமை பேரவையின் அமர்வில் சமர்ப்பிக்கப்படும் எந்த தீர்மானத்தின் 51/1 நகல் வடிவையும் இலங்கை தொடர்ந்து எதிர்க்கவும், இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற போர் குற்றங்கள் குறித்து ஆதாரங்களை சேகரிக்கும் வெளிப்புற பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கும் தீர்மானத்தை நிராகரிக்கவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது.