உள்நாடு

சுங்கப் பரிசோதனையின்றி 323 கொள்கலன்கள் ஏன் விடுவிக்கப்பட்டன? எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

தொடர்ச்சியாக கொள்கலன் பரிசோதனை நடவடிக்கைகளில் ஏற்படும் நெரிசலுக்கு மத்தியில் சுங்கப் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் 323 கொள்கலன்கள் தொடர்பில் நாட்டில் பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பில் நாட்டுக்கு உண்மைகளை வெளிப்படுத்த துறைக்குப் பொறுப்பான அமைச்சராக இருக்கும் தற்போதைய ஜனாதிபதி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பல துறைகளுக்கு மறைமுகமாக பாதிப்பு ஏற்படுவதால் இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் நேற்று (06) நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு கூறினார்.

கொழும்பு துறைமுகத்தில் காணப்படும் கொள்கலன் பரிசோதனை நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதம் ஏற்றுமதி மற்றும் மீள் ஏற்றுமதி மூலம் அதிக வருமானம் ஈட்டும் எம்மைப் போன்ற நாட்டிற்கு நல்லதல்ல. இது தொடர்பில், பரிசோதிக்கப்படாமல் வெளியிடப்பட்ட ‘கட்டாயம் பரிசோதனைக்குட்படுத்த வேண்டும் என சிவப்பு முத்திரை’ பொறிக்கப்பட்ட 323 கொள்கலன்களை விடுவித்தமையை யார் பொறுப்பேற்பது? ஏன் அவ்வாறு விடுவிக்கப்பட்டன என்றும் அரசாங்கத்திடம் அவர் கேள்வி எழுப்பினார்.

அவ்வாறே, கொழும்பு துறைமுகத்தில் நாளொன்றுக்கு பெறப்படும் கொள்கலன்களின் எண்ணிக்கை, தற்போது காணப்படும் கொள்கலன் பரிசோதனை ஆய்வு வசதிகளால் ஒரு நாளைக்கு பரிசோதிக்கப்படும் கொள்கலன்களின் எண்ணிக்கை, இந்த பரிசோதனை நடவடிக்கைகளை தொடர்ந்து பேணிச் செல்ல முடியுமா? இலங்கையில் கொள்கலன்களை விரைவாக பரிசோதனை செய்து விடுவிப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கேள்வி எழுப்பினார்.

அத்துடன், கடந்த மாதம் கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன்கள் விடுவிக்கப்படுவதில் ஏற்பட்ட பாரிய நெரிசல் மற்றும் காலதாமதத்தினால் திருப்பியனுப்பப்பட்ட கப்பல்களின் எண்ணிக்கை மற்றும் அதனால் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நட்டம் குறித்தும் இதன் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பாதகமான நிலைமைகள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த கொள்கலன்களில் உள்ள பொருட்கள் என்ன? அவற்றை சபைக்கு சமர்ப்பியுங்கள் என்றும், அவை சட்டவிரோதமானை அல்லது மனித நுகர்வுக்கு தகுதியற்றவை அல்ல என்று பரிசோதனை மேற்கொள்ளாமல் முடிவு செய்தவர்கள் மற்றும் அவற்றை இறக்குமதி செய்தவர்கள் யார் என்பதையும் சபைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும், இந்த விவகாரம் தொடர்பில் யார் முழுப்பொறுப்பெடுப்பது? என்றும் இவை சட்டவிரோத கொடுக்கல் வாங்கல்கள் அல்ல என்பதற்கு என்ன உத்தரவாதம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது மேலும் கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *