வாழைச்சேனை மத்தி பிரதேச செயலகப் பிரிவில் ஜயவிமன, ரன்விமன வீடுகள் கையளிப்பு
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் சமுர்த்தி திணைக்களத்தின் அனுசரணையுடன் நிர்மாணிக்கப்பட்ட ஜயவிமன, ரன்விமன வீடுகள் கையளிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்றது.
இதனை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.ராஜ்பாபு ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளிடம் கையளித்தனர்.
பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன், உயர்தர மாணவர்களுக்கு சிப்தொர புலமைப் பரிசில் கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டதுடன், பயனாளிகளுக்கு வீட்டுத் தோட்ட பயிர்க் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், கோறளைப்பற்று மத்தி உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ரமீஸா, தலைமை முகாமையாளர் எஸ்.ஏ.எம்.பசீர், முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எல்.ஏ.மஜீத், வங்கி முகாமையாளர் எஸ்.ரவி, கருத்திட்ட முகாமையாளர் ஏ.எல்.சரீப், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.




(எச்.எம்.எம்.பர்ஸான்)