உள்நாடு

பயங்கயவாத தடைச் சட்டத்தின் மூலம் தொடரும் அடக்குமுறைகள்; எதிர்க் கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதாக தேர்தல் மேடைகளில் அரசாங்கம் கூறிய போதிலும், தற்போது அந்தச் சட்டத்தின் ஊடாக கருத்து, ஊடக மற்றும் தனிநபர் சுதந்திரம் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான விவாதம் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் நடைபெற்று வருகிறது. இதில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குற்றம் சுமத்தியதுடன், அவர் மேலும் கூறியதாவது,

”அரசாங்கம் தேர்தல் மேடைகளில் கூறிய விடயங்களுக்கும் சமகாலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் விடயங்களுக்கும் இடையில் பாரிய இடைவெளிகள் உள்ளன.

பயங்கரவாதத் தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்படும் என அரசாங்கம் கூறியிருந்தது. ஆனால், தற்போது பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பயன்படுத்தி கருத்துச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம் மற்றும் பிரஜைகளின் சுதந்திரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

பயங்கரவாதத் தடைச்சட்த்தை பயன்படுத்தி ஊடக ஒடுக்குமுறைகளை ஏற்படுத்துவது நீதியானதா எனக் கேள்வியெழுப்புகிறோம். இந்த மக்கள் ஆணை கிடைக்கப்பெற சமூக ஊடகங்கள் பாரிய பங்களிப்பை வழங்கியிருந்தன.

ஆனால், நீக்கப்படும் என கூறிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பயன்படுத்தி சமூக ஊடகச் செயல்பாட்டாளர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அதனால் கூறிய விடயங்களை செய்வதாயின் இந்த ஒடுக்குமுறையை நிறுத்துங்கள்.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *