உள்நாடு

வெள்ள அனர்த்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அவசரமாகக் கூடியது முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள நிலையினையடுத்து, பாதிப்புக்குள்ளான முல்லைதீவு மாவட்ட மக்களின் அவசர தேவைகளைக் கண்டறிந்து, அதற்குத் தேவையான உதவிகளை செய்யும் வகையில், இன்றைய தினம் (29), முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் அவசரமாகக் கூட்டப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்ஹ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர் அ.உமா மகேஸ்வரன், மேலதிக மாவட்ட செயலாளர் எஸ்.குணபாலன் உட்பட பிரதேச செயலாளர்கள், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள், ஏனைய திணைக்கள அதிகாரிகள், பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எனப் பலரும் இதன்போது பிரசன்னமாகி இருந்தனர்.

வெள்ளத்தால் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறித்தும் அவர்களது அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகள் போன்றவற்றை பெற்றுக்கொடுப்பது பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

மேலும், விவசாயப் பாதிப்பு, கால்நடை, மீன்பிடி, உணவு, குடிநீர், நோய் தடுப்பு, நீர்ப்பாசனம், உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் உள்ள வடிகாலமைப்பு, கிராமிய பாதைகள் என்பன தொடர்பிலும் இன்றைய ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டதுடன், அவற்றுக்கான தீர்வுகளும் முன்வைக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *