விளையாட்டு

9ஆவது மகளிர் ரி20 உலகக்கிண்ணம்; பாகிஸ்தானிடம் வீழ்ந்தது இலங்கை

ஐசிசி மகளிர் வு20 உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

9ஆவது ரி20 உலகக்கிண்ணத் தொடரில் 10 அணிகள் பங்கேற்றிருக்க முதல் சுற்று லீக் ஆட்டத்தில் ஒரு குழுவில் 5 அணிகள் வீதம் இரு குழுக்கலாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய குழு ஏ இல் நேற்று இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி , பாகிஸ்தான் அணியை எதிர்த்தாடியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர் செய்திருந்தது. அதற்கமைய இலங்கையின் சுழல்பந்துவவீச்சில் நிலைகுலைந்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 116 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் அணித்தலைவி பாத்திமா சனா 20 பந்துகளுக்கு 30 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார். பந்துவீச்சில் சமரி அதபத்து, சுகந்திகா குமாரி மற்றும் உதேசிகா பிரபோதனி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் எட்டக்கூடிய 117 என்ற வெற்றி இலக்கு நோக்கி பதிலுக்கு களம் நுழைந்த இலங்கை அணிக்கு துடுப்பாட்ட வீரர்கள் நிலைத்திருந்து ஓட்டங்களைப் பெறத் தவறினர். இதனால் இலங்கை அணியால் 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 85 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது. துடுப்பாட்டத்தில் லக்ஷி டி சில்வா 22 ஓட்டங்களையும், விஷ்மி குணரத்ன 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்திருந்தனர். பந்துவீச்சில் சாடியா இக்பால் 3 விக்கெட்டுகளை விழ்த்தினார்.

இதனால் பலமிக்க இலங்கை அணியை 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அணி தன் புள்ளிக்கணக்கை ஆரம்பித்தது. இந்நிலையில் இலங்கை அணி தங்களுடைய அடுத்த போட்டியில் நடப்புச் சம்பியனான அவுஸ்திரேலிய அணியை நாளை சனிக்கிழமை (05) எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *