உள்நாடு

புதிதாக உருவாகும் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் புதிய கூட்டணி

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து, புதிய கூட்டணியை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன.
அதன்படி, இது தொடர்பான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நேற்று (28) நடைபெறுவதாக இருந்தது.


தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதி நிதித்துவப்படுத்தும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருக்கிடையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.


எதிர்வரும் தேர்தல்களில் தமிழ் முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து, போட்டியிடுவது தொடர்பிலான முதற்கட்டப் பேச்சுவார்த்தை, கடந்த வாரம் இடம்பெற்றது.
எவ்வாறாயினும், புதிய கூட்டணியை உருவாக்குவது குறித்து, இதன்போது இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போதும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், தமிழ் முற்போக்குக் கூட்டணியும், ஐக்கிய மக்கள் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் என்பதோடு, அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ப்பது குறித்தும் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.


எவ்வாறாயினும், அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை, ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ பெற்றார்.
இவ்வாறான நிலையில், எதிர்க்கட்சிகளின் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட்டால், பாராளுமன்றத்தில் அதிகளவான ஆசனங்களைக் கைப்பற்ற முடியும் என இக்கட்சிகள் கருதுகின்றன.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *