உள்நாடு

தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் ; தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்

“பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள், ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்” என, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், “தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள், எதிர்வரும் ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.


1981 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தின் பிரகாரம், தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து 7 முதல் 14 நாட்களுக்குள் தபால் மூல வாக்குகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.


அதன்படி, அனைத்து தபால் வாக்காளர்களும் இந்தப் பாராளுமன்றத் தேர்தலுக்கான தங்களின் தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை,நிறுவனத் தலைவரால் சான்றளித்து, தங்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்து, மாவட்டத் தேர்தல்கள் அதிகாரியிடம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்தத் தேர்தல், 2024 வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டது.


இதன்படி, 2024 செப்டம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *