இம்முறை 76 வருடங்கள் இல்லாத ஒரு புத்தாண்டைக் கொண்டாடத் தயாராகவும் ; வஸந்த சமரசிங்க வேண்டுகோள்
“முட்டையில் கொமிஷன் அடித்த அமைச்சர்கள் தற்போது இல்லை என்பதால், அதன் பயன் மக்களுக்குக் கிடைத்துள்ளது” என, மக்கள் விடுதலை முன்னணியில் உயர் பீட உறுப்பினர் வஸந்த சமரசிங்க குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று (28) நடந்த ஊடக மாநாட்டில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“முன்னர் முட்டை 48 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட போது, 8 ரூபா கமிஷன் வழங்கப்பட்டதாக பகிரங்க விமர்சனம் எழுந்தது. எமது அமைச்சர்களுக்கு 8 வீதம் கமிஷன் இல்லை. அதனால், முட்டை விலை தானாக 8 ரூபா குறையும். எனவே, இதில் தெளிவாக ஒரு விடயம் உள்ளது.
முட்டையில் கமிஷன் அடித்த கூட்டம், தற்போது அமைச்சுப் பதவிகளில் இருந்து வெளியேறியதனால், முட்டை விலை வீட்டை அடைந்துள்ளது.
எதிர்காலத்தில், அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் மேலும் குறைவடையும். இதனால், 2025 இல் மகிழ்ச்சியாக வாழ முடியும்.
அடுத்த மாதம் இடம்பெறும் தேர்தலில் நாம் 2/3 பெரும்பான்மையில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து, 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 76 வருடங்கள் இல்லாத அளவு ஒரு புத்தாண்டைக் கொண்டாடத் தயாராகுமாறு கூறுகிறேன்.” என்றார்.
( ஐ. ஏ. காதிர் கான் )