உள்நாடு

பொதுத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது? ரணிலுக்கு ஆதரவளித்த கட்சிகளுடன் இன்று பேச்சு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளும் குழுக்களும் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அரசியல் கூட்டணியின் கீழ் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இதுவரையில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படாத நிலையில், இன்று வியாழக்கிழமை பல கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இன்று காலை விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது, சின்னத்தில் போட்டியிடுவது உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கூட்டணி அமைத்தால், அடிப்படை விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படும் எனவும் கூறப்படுகின்றது.

மேலும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதித் தேர்தலின் போது ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளித்த குழுவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று மாலை 4.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் விதம் குறித்து இதன்போது இறுதி உடன்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *