உள்நாடு

எம்மீது நம்பிக்கை வைத்து ஆட்சி அதிகாரத்தை வழங்கியவர்கள் உட்பட அனைத்து மக்களும் இணைந்து, இந்த நாட்டைக் கட்டியெழுப்பும் பணிக்கு தோள் கொடுப்பீர்கள் என நம்புகிறோம்

இன்றைய விசேட உரையில் ஜனாதிபதி

“இறுதியாக இருந்த பாராளுமன்றம், மக்கள் ஆணையைத் திரிபுபடுத்தியதாகக் காணப்பட்டது. அதனால், நேற்றைய (24) தினம் பாராளுமன்றத்தைக் கலைக்க நடவடிக்கை எடுத்தேன்”
இவ்வாறு, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது ,


“எனவே, இந்த வெற்றியின் உரிமையை, நம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறேன். நமது அரசியல் இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து, பல்வேறு அவதூறுகளையும், பொய்யான, திரிபுபடுத்தப்பட்ட தகவல்களையும் ஒதுக்கி விட்டு, புதிய பரிசோதனைக்கு அஞ்சாமல், எமது அரசியல் இயக்கத்திற்கு நமது நாட்டின் ஆட்சி அதிகாரத்தை வழங்கும் அளவிற்கு, பெரும் உறுதியுடன் இருந்த பிரஜைகள் உட்பட அனைத்து மக்களுக்கும் இந்த நாட்டைக் கட்டியெழுப்பும் பணிக்கு தோள் கொடுப்பதற்கான பலம் இருக்கும் என, நாங்கள் நம்புகிறோம்.
இந்த வெற்றிக்காக எமக்கு முன்னரும், எங்களுடனும் பலவிதமான தியாகங்களைச் செய்த, சில சமயங்களில் தங்கள் உயிரைக் கூட தியாகம் செய்த பல தலைமுறைகளின் விலைமதிப்பற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரையும் நாங்கள் மரியாதையுடன் நினைவு கூருகிறோம். இந்த வெற்றியையும், அதன் மூலம் கட்டியெழுப்பப்படும் வளமான நாட்டையும் அவர்களுக்கு அளிக்கும் கௌரவமாகவே நான் கருதுகிறேன்.


இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பங்கை, கூட்டு செயற்பாடாக நிறைவேற்றும் திறன் எமக்கு உள்ளது. அதற்கான மிகத் திறமையான குழு எங்களிடம் உள்ளது. நம் அனைவருக்கும் அது குறித்த முழுமையான உறுதிப்பாடு உள்ளது. நாம் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்த எத்தகைய மாற்றத்தையும் மேற்கொள்வதற்கு முன்னதாக, பொருளாதாரத்தை நிரந்தரமான நிலைக்கு உயர்த்துவது அவசியம் என நாம் நம்புகிறோம்.


அதற்காக, நீண்ட கால மத்திய காலத் திட்டங்களைத் தயாரிப்பதற்கு முன்னர், பின்பற்ற வேண்டிய துரித பொருளாதார செயற்பாடுகளின் ஊடாக குறுங்கால ஸ்தீர நிலையை ஏற்படுத்த நாம் நடவடிக்கை எடுப்போம்.
இறுதியாக இருந்த பாராளுமன்றம், மக்கள் ஆணையைத் திரிபுபடுத்தியதாகக் காணப்பட்டது. அதனால், நேற்றைய (24) தினம் பாராளுமன்றத்தைக் கலைக்க நடவடிக்கை எடுத்தேன்.
அரசியலமைப்புக்கு அமைவாக, நாட்டைக் கொண்டு செல்வதற்காக எமது பாராளுமன்ற பிரதி நிதித்துவத்திற்கு அமைவாக, அமைச்சரவை ஒன்றை நியமித்தேன். அன்றாடம் சூரியன் உதிக்கும் ஒவ்வொரு பொழுதிலும் மக்கள் காணும் கனவுகள் உள்ளன.


அது இன்று இருப்பதை விடவும் சிறந்த நாடாகும்.


ஆனாலும், பல வருடங்களாக அது கனவாகவே போய்விட்டது என்பதையும் நானும் அறிவேன்.
சந்தர்ப்பவாதம், அதிகார மோகம், சர்வாதிகாரம் மற்றும் இனவாதம் காரணமாக எமது நாட்டை மேலும் உயர்த்தி வைக்க எம்மால் முடியாமல் உள்ளது.


இருப்பினும், எமக்கு வரலாற்றில் நழுவ விட முடியாத சந்தர்ப்பமொன்று கிடைத்திருக்கிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து பல்வகைத் தன்மையை ஏற்றுக்கொள்ளும் செழிப்பான நாட்டைக் கட்டியெழுப்புவோம்”
இவ்வாறு, ஜனாதிபதி அவரது விசேட உரையில் குறிப்பிட்டார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *