உள்நாடு

இலங்கை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது; பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவுசெய்யும் தேர்தல் நாளைமறுதினம் 21ஆம் திகதி நடைபெற உள்ளது.

தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில், நாடு முழுவதும் பொலிஸார் மற்றும் முப்படையினர் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இன்று வியாழக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெற்ற விசேட ஊடகச்சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். “நாடு முழுவதும் தேர்தல் கடமைகளுக்காக 63ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதற்கு மேலதிகமாக முப்படையினரும் பாதுகாப்பு வழங்க உள்ளனர்.

ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 2 பொலிஸார் வீதம் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. அதனை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து வழங்க உள்ளனர்.

நாடு முழுவதும் பொது மக்களுக்காக பாதுகாப்பு மற்றும் ஏனைய தேர்தல் செயல்பாடுகளுக்காக பாதுகாப்புக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸார், முப்படையினர் மற்றும் புலனாய்வுத்துறையினர் இணைந்து விசேட செயல்பாட்டு மையமொன்றை உருவாக்கியுள்ளனர். இந்த மையம் தேர்தல்கள் திணைக்களம் மற்றும் ஆணைக்குழுவுடன் இணைந்து பணியாற்றும். ” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *