உள்நாடு

புலனாய்வு தகவல்களின்படி ஐக்கிய மக்கள் சக்தி 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் வெற்றியீட்டும்; மொனராகலை கூட்டத்தில் சஜித் பிரேமதாச

புலனாய்வுத் துறை அறிக்கையின் பிரகாரம் 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும். காலை வாருகின்ற ரணில் அநுர ஜோடி கீழ் மட்டத்திலே இருக்கின்றது. புனித தலதா மாளிகையில் தேர்தல் விஞ்ஞாபனத்தை முதன் முதலில் சமர்ப்பித்து ஆசிர்வாதத்தை பெற்றுக் கொண்ட பின்னரே நாம் தேர்தல் பணிகளை ஆரம்பித்தோம். தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் அனைத்தையும் புத்தபெருமானின் ஆசீர்வாதங்கள் பாதுகாக்கும் என்பதோடு நாம் நிச்சயமாக வெற்றி பெறுவோம். இந்த வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கின்றேன் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 68 ஆவது மக்கள் வெற்றி பேரணி செப்டம்பர் 18 ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் மொனராகலையில் மிக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

வன்முறை என்பது ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையல்ல. எனவே மாற்றுக் கொள்கையோடு இருக்கின்ற எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த நாட்டை கட்டி எழுப்புகின்ற பயணத்தில் அனைவரையும் பங்காளர்களாக இணைத்துக் கொள்வோம். தான் மத சுதந்திரத்தை கௌரவப்படுத்துவதோடு, பௌத்தம் இந்து இஸ்லாம் கத்தோலிக்கம் ஆகிய மதங்களை பின்பற்றுவதற்கு எவருக்கும் உரிமை இருப்பதனால், அந்த உரிமையை பாதுகாப்பதோடு, மதசார்பற்ற நாட்டை உருவாக்குவதில்லை என்றும் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 ஆறு மாதங்களில் போதைப் பொருள் விநியோகத்தை நிறுத்துவோம்.

தாம் அதிகாரத்திற்கு வந்து ஆறு மாதங்களுக்குள் போதைப்பொருள் விநியோகத்தை நிறுத்துவதற்கு தேவையான அதிகபட்ச தீர்மானங்களை எடுத்து, போதைப் பொருள் மாபியாவை நிறைவுக்கு கொண்டு வருவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 வாக்கை வீணடிக்காது ஐக்கிய மக்கள் சக்திக்கு வழங்குங்கள்.

மக்கள் விடுதலை முன்னணி, திசைகாட்டி, பொது ஜன முன்னணி, யு என் பி ஆகியவற்றுடன் தொடர்புடைய அனைவரும் இறுதித் தருணத்தில் உங்கள் வாக்குகளை வீணடிக்காமல் தொலைபேசிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த முறை தேர்தலில் 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் நாம் வெற்றி பெறுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 எம்மிடம் மோசடியான திருட்டு டீல்கள் இல்லை.

எம்மிடம் பொய், திருட்டு, மோசடி என்பன இல்லை. அரசியல் டீல்கள் இல்லை. பாதிக்கப்பட்டிருக்கின்ற 220 இலட்சம் மக்களை மீட்டெடுப்பதற்கான சமூக ஒப்பந்தம் மாத்திரமே காணப்படுகின்றது. இதன் போதும் வரி சுமையை குறைத்து முதலீடுகளை அதிகரித்து ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்போம். நாட்டை சீரழித்த திருடர்களை சட்டத்தின் முன் நிறுத்தி நாட்டில் இருந்து திருடிச் சென்ற அனைத்து சொத்துக்களையும் வளங்களையும் மீண்டும் நாட்டுக்கு பெற்றுக் கொள்வோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

🟩 நான் சொல்வதைச் செய்கின்றவன்.

விவசாயிகளுக்கு 5000 ரூபாவுக்கு நிவாரண அடிப்படையில் உரத்தை வழங்குவோம். வெல்லஸ்ஸ பகுதியில் இல்லாது போன பாரம்பரியமாக விவசாயம் செய்யப்பட்ட வந்த நிலங்களை மீண்டும் பெற்றுக் கொடுப்போம். வறுமையை ஒழிப்பதற்காக ஐந்து திட்டங்களின் கீழ் மாதம் ஒன்றுக்கு இருபதாயிரம் ரூபா வீதம் 24 மாதங்களுக்கு நிவாரணங்களை வழங்குவோம். நாம் வாக்குறுதியளித்தால் அது வார்த்தைகளோடு மாத்திரம் மட்டுப்படாமல் அதனை நிதர்சனப்படுத்துவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 வெட்கமில்லாத அரசாங்கம் கதிர்காமத்திலும் பார் திறந்து இருக்கிறது.

இந்த அரசாங்கம் கதிர்காம புண்ணிய பூமியில் திறந்து இருக்கின்ற மதுபான சாலையை மூடுவோம். இந்த அரசாங்கம் வெட்கமில்லாமல் மத புண்ணிய பூமிகளிலும் மதுபான சாலைகளை திறக்கின்றது. எனவே ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றி பெறச் செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *