உள்நாடு

இந்த வெற்றியை பெருவெற்றியாக உயர்த்தி வைப்பதுதான் எங்களுடைய பொறுப்பு; அநுராதபுரம் கூட்டத்தில் அநுர குமார திசாநாயக்க

தேசிய மக்கள் சக்திக்கு வரலாற்றுரீதியான வெற்றியை இந்த அநுராதபுர மக்கள் கொண்டுவருவார்கள் என்பது எமது நம்பிக்கையாகும். இந்த மேடையில் இன்று நூற்றுக்கணக்கான பிக்குமார்கள் வருகைதந்து மதத்தைப் பாவித்து எமக்கெதிராக முன்வைக்கின்ற பொய்யான குறைகூறல்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்கள்.

நாங்கள் மிகவும் ஒழுங்கமைந்தவகையில் இந்த தேர்தல் இயக்கத்தை முன்னெடுத்து வந்தோம். இன்றளவில் எமது தேர்தல் இயக்கம் இந்த நாட்டின் பொதுமக்களால் தமது கைகளில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இப்போது சஜித், ரணில் இந்த நிலைமையில் மிகவும் பதற்றமடைந்திருக்கிறார்கள். எங்களுக்கு எதிராக பலவிதமான சேறுபூசல்கள், குறைகூறல்கள், பொய்யான தகவல்களை மொத்தமாக பரப்பி வருகிறார்கள். நாங்கள் அவர்களுக்கு கூறவேண்டியது நீங்கள் தாமதித்துவிட்டீர்கள் என்பது தான். இந்த வெற்றியை இப்போது நிறுத்திவிட முடியாது. இந்த வெற்றியை பெருவெற்றியாக உயர்த்தி வைப்பதுதான் எங்களுடைய பொறுப்பு. நாங்கள் நேற்று அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை, ஒலுவில், சாய்ந்தமருது, சம்மாந்துறை, நிந்தவூர் ஆகிய பல இடங்களில் கூட்டங்களை நடத்தினோம்.

ராஜபக்ஷாக்கள் மீண்டும் மீண்டும் கூறிக்கூறி உக்கிப்போன மதவாத, இனவாத போராட்டக் கோஷங்களை இப்போது தோளில் சுமந்து செல்பவர்கள் சஜித் அணியைச் சோ்ந்தவர்களாவர்.

அந்த இடங்களில் முஸ்லிம் மக்கள் பல்லாயிரக்கணக்கில் இந்த நாட்டை மாற்றியமைப்பதற்காக எம்மைச்சுற்றி அணிதிரண்டுள்ள விதத்தை நாங்கள் கண்டோம். அதனால் இலங்கையில் முதல் தடவையாக மிகவும் தனித்துவமான அரசாங்கமொன்று அமையப்போகிறது. அது எப்படிப்பட்ட அரசாங்கம்? இதுவரை காலமும் பிறருக்கு எதிரான அரசாங்கங்களே அமைக்கப்பட்டன. வடக்கு கிழக்கிலுள்ள இனத்துவங்களுக்கு எதிரான அரசாங்கங்கள். அரசியல் மேடைகளில் “தேசம் ஆபத்தில். ஏனைய இனங்களைச் சோ்ந்த மக்கள் பெரும்பான்மை இனத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தேசத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக அவர்களுக்கு வாக்குகளை அளிக்குமாறு” கூறினார்கள். மதத்தை காப்பாற்றிக் கொள்ள அவர்களுக்கு வாக்குகளை அளிக்குமாறு கூறினார்கள்.

இப்போதும் அந்த வகையிலான தோ்தல் இயக்கமொன்றை அமுலாக்க அவர்கள் முயற்சி செய்கிறார்கள். ராஜபக்ஷாக்கள் மீண்டும் மீண்டும் கூறிக்கூறி உக்கிப்போன மதவாத, இனவாத போராட்டக் கோஷங்களை இப்போது தோளில் சுமந்து செல்பவர்கள் சஜித் அணியைச் சோ்ந்தவர்களாவர். அந்த போராட்ட கோஷங்கள் ராஜபக்ஷாக்களையும் அழித்தொழித்த போராட்டக் கோஷங்களாகும். அவை இலங்கையின் இடதுசாரி இயக்கத்திற்கு எதிராக 1960 களிலிருந்து கூறிக்கொண்டிருப்பவையாகும். இப்போது அவை இற்றுப்போன போராட்டக் கோஷங்களாகும். அதனால் சில புதிய பொருட்களை தேடிக்கொள்ளுங்கள் என நான் சஜித் பிரேதாசவிற்கு கூறுகிறேன். அந்த பழைய சாமான் கடையிலிருந்து சாமான்களை கொண்டுவராதிருக்குமாறு கூறுகிறேன்.

நாங்கள் சுதந்திரம் பெறும்போதும் பிளவுபட்டிருந்தோம். சுதந்திரத்திற்கு பின்னரும் எங்களை பிளவுபடுத்தினார்கள்

வடக்கு, கிழக்கு, தெற்கு ஆகிய எல்லா பிரதேசங்களிலும் வசிக்கின்ற மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்த அரசாங்கமொன்றை முதல் தடவையாக அமைக்கப்போகிறோம். சிங்கள, தமிழ், முஸ்லிம், மலாயர், பறங்கியர் ஆகிய அனைத்து மக்களினதும் நம்பிக்கையை வென்றெடுத்த அரசாங்கமொன்று. இந்த நாட்டில் தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கு இருந்த வரலாற்று ரீதியான வாய்ப்புக்களை இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் கைவிட்டுவிட்டார்கள். வெள்ளைக்காரனின் ஆட்சியின் கீழும் இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் உருவாகக்கூடிய வகையில் ஒருவரையொருவர் பிரித்தே எமது நாட்டை ஆட்சி செய்தார்கள். 1818 கலகத்தின்போது வெள்ளைக்காரனுக்கு எதிராக எமது நாட்டு மக்களால் ஒன்று சேரமுடியாமல் போய்விட்டது. 1848 இலும் அதுவே இடம்பெற்றது. 1919 இல் சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்கள் ஒன்றுசோ்ந்து இலங்கை தேசிய காங்கிரஸை கட்டியெழுப்பினார்கள்.

மிகவும் குறுகிய காலத்தில் அது சிதைவடைந்தது. 1928 இல் பண்டாரநாயக்க தனிவேறான சிங்கள மகா சபையை அமைக்கத்தொடங்கினார்கள். தமிழ் காங்கிரஸ் தனிவேறாக உருவாகக் தொடங்கியது. சோனகர் சங்கம் தனிவேறாக உருவாகியது. எதிரிக்கு எதிராக ஒன்று சோ்ந்து போராடுவதற்கு பதிலாக பிளவுபட தொடங்கினார்கள். அந்தந்த கூட்டமைப்புகளின் தலைவர்கள் கள்ளத்தனமாகச் சென்று புறங்கூறி ஒரு சில அவா நிறைவுகளை கேட்கத் தொடங்கினார்கள். தேசம் பிளவுபட்டது. 1948 இல் சுதந்திரம் பெறும்போதும் நிலைமை அப்படித்தான். இந்தியா சுதந்திரமடைகின்ற வேளையில் அந்த நாட்டின் வலதுசாரி, இடதுசாரி தலைவர்கள் அனைவருமே ஒன்று சோ்ந்து இந்திய சுதந்திர போராட்டத்திற்கு தலைமைத்துவம் வழங்கினார்கள். நாங்கள் சுதந்திரம் பெறும்போதும் பிளவுபட்டிருந்தோம். சுதந்திரத்திற்கு பின்னரும் எங்களை பிளவுபடுத்தினார்கள். 1948 சுதந்திரம் கிடைக்கிறது. 1949 இல் குடியுரிமைச்சட்டம் நிறைவேற்றப்படுகிறது.

அந்த சட்டத்தை கொண்டுவந்து பெருந்தோட்டத்தைச் சோ்ந்த மக்களின் வாக்குரிமையை பறித்தார்கள். 1930 களில் வடக்கில் பலம்பொருந்திய தமிழ் இளைஞர் இயக்கமொன்று இருந்தது. அவர்கள் பகுதியளவிலான சுதந்திரம் வேண்டாம் என்று கூறி முழுமையான தன்னாதிக்கத்தை கோரி போராடினார்கள். எமது நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுக்கொள்வதற்காக யாழ்ப்பாணத்தின் இளைஞர் இயக்கம் பாரிய செயற்பொறுப்பினை ஆற்றியது. எனினும் அதிகாரத்தை பெற்ற எமது ஆட்சியாளர்கள் அதிகாரத்திற்காகவே எம்மை பிரித்தார்கள்.

ஒருவருக்கொருவர் முட்டிமோதிக்கொள்கின்ற நாடாக இந்த நாட்டை மாற்றினார்கள்.

நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய தமிழ் இளைஞர்கள் 1949 இல் கொண்டுவந்த குடியுரிமைச் சட்டம் காரணமாக தமிழரசுக் கட்சியென தனிவேறான கட்சியொன்றை உருவாக்கிக் கொள்கிறார்கள். வடக்கிற்கு தனியான ஆட்சியொன்றை கோரினார்கள். 1956 அளவில் மொழிப் பிரச்சினையொன்று உருவாக்கப்படுகிறது. 1958 அளவில் ஸ்ரீ எழுத்தில் கறுப்பெண்ணை பூசப்படுகிறது. மீண்டும் சிங்கள, தமிழ், முஸ்லிம் கலவரம் ஆரம்பிக்கின்றது. 1965 இல் டட்லியின் வயிற்றில் மசாலை வடை என்று பேரணி செல்ல தொடங்குகிறார்கள். மீண்டும் 1972 இல் தமிழர் ஐக்கிய முன்னணி அமைக்கப்படுகிறது. 1976 இல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி உருவாக்கப்படுகிறது. எல்லா தமிழ் கட்சிகளும் ஒன்றுசோ்ந்து வட்டுக்கோட்டை சம்மேளனம் என கூறி தனிவேறான அரசசொன்றுக்கான மக்கள் ஆணையை கோரி நிற்கிறது. 1978 இல் பயங்கரவாத தடுப்புச் சட்டம் கொண்டுவரப்படுகிறது. மக்களை அடக்க தொடங்குகிறார்கள்.

1981 இல் மாவட்ட அபிவிருத்திச் சபை தோ்தலின் போது அன்று யாழ்ப்பாணத்திற்கு சென்ற ரணில், காமினி திசாநாயக்க, ஜே.ஆர். வடக்கு மக்களின் வாக்குரிமையை கொள்ளையடித்தார்கள். யாழ் நூலகத்திற்கு தீ வைத்தார்கள். மீண்டும் மீண்டும் மோதல்களை உருவாக்கினார்கள். 1983 இல் மீண்டும் கறுப்பு ஜுலையை உருவாக்கினார்கள். நாடு பூராவிலும் கடைகளையும் சினிமா தியேட்டர்களையும் தீக்கிரையாக்கினார்கள் எம்மை பிளவுபடுத்தினார்கள். பிரித்தார்கள். ஒருவருக்கொருவர் முட்டிமோதிக்கொள்கின்ற நாடாக இந்த நாட்டை மாற்றினார்கள். 1984 அளவில் பிரபாகரன் தற்கொலை குண்டுதாரிகளை உருவாக்கினார். அதன் பின்னர் சிவில் யுத்தம் ஒன்று ஆரம்பிக்கிறது. மிருகத்தனமான மனித படுகொலைகள் தொடங்குகின்றது. நாட்டை பாரிய அனர்த்தத்திற்கு இரையாக்கியனார்கள். 2009 இல் யுத்தம் முற்றுப்பெற்றது. சில நாட்கள் தான் உருண்டோடியது. தோ்தல் நெருங்கும்போது மலட்டுக் கொத்து, மலட்டு ஆடைகள், மலட்டு மருந்துவர்கள் இருப்பதாக கூறத்தொடங்கினார்கள். உயிர்த்த ஞாயிறு தாக்குதலை உருவாக்கினார்கள். மக்களை பிரித்தார்கள். அது தானே நடந்தது.

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி நாட்டை போதைப்பொருள் அனர்த்தத்திலிருந்து விடுவித்துக்கொள்ளும்

வெள்ளைக்காரர்கள் எங்களை பிரித்தார்கள். கறுப்பு வெள்ளைக்காரர்களும் எங்களை பிரித்தார்கள். அதனால் இந்த நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம், மலாயர், பறங்கியர் ஆகிய நாம் அனைவரும் ஒரே இலங்கை தேசத்தவரை கட்டியெழுப்புதல் பற்றிய எதிர்பார்ப்புடன் இருந்தோம். எமது ஆட்சியாளர்கள் அதற்கு வாய்ப்பளிக்கவில்லை. எம்மை பிரித்தார்கள். முட்டி மோதுகின்ற நிலைமையை உருவாக்கினார்கள். யுத்தத்தை உருவாக்கினார்கள். வடக்கையும் தெற்கையும் அழித்தார்கள். இப்போது எங்களுக்கு முதல் தடவையாக சிங்கள, தமிழ், முஸ்லிம், மலாயர், பறங்கியர் ஆகிய அனைவருமே ஒன்றாக சோ்ந்து ஒரே கொடியின் நிழலில் இருக்க தேசிய ஒற்றுமையை மலரச் செய்விக்கின்ற வாய்ப்பு உருவாகியிருக்கிறது. சஜித் பிரேதாசாக்கள் பழைய மதவாத, இனவாத அழுக்குத் துணிகளை சலவை செய்ய தொடங்கியிருக்கிறார்கள். இந்த அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

நாங்கள் எல்லா சமயங்களுக்கும் மதிப்பளிப்பவர்கள். இந்த நாட்டில் பல நூற்றாண்டுகளாக மக்கள் பிரார்த்திக்கின்ற தேசிய ஒற்றுமையை உறுதி செய்கின்ற அரசாங்கத்தை நாங்கள் செப்டெம்பர் 21 ஆம் திகதிக்கு பின்னர் நிறுவுவோம். அநுராதபுரம் எமது நாகரிகத்தின் நகரகமாகும். இன்று போதைத்தூள் தாண்டவமாடுகிறது. போதை பொருட்கள் பெரும் தொற்றாக மாறியிருக்கிறது. இந்த முழு நாட்டையும் அந்த அனர்தத்திலிருந்து விடுவித்துக் கொள்ள வேண்டும். இந்த அனர்த்தங்கள் அனைத்தினதும் திரைமறைவில் இருப்பவர்கள் ஆட்சியாளர்களே. அரசியல்வாதிகளின் அனுசரணை கிடைக்காமல் இந்த குற்றச் செயல் மிக்க தீத்தொழில் நிலவமாட்டாது. இந்த அனைத்து அனர்த்தங்களிலிருந்தும் தேசிய மக்கள் சக்தி இந்த நாட்டை முற்றாகவே விடுவித்துக் கொள்ளும் என நாங்கள் உறுதியாக கூறுகிறோம். எமது வெற்றியை மகத்தான வெற்றியாக உயர்த்திப்பிடிக்கவே முழு நாடும் செப்டெம்பர் 21 ஆம் திகதிவரை காத்திருக்கிறது. நாங்கள் அனைவரும் ஒன்று சோ்ந்து அதன் பின்னர் இந்த நாட்டை கட்டியெழுப்புவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *