உள்நாடு

ஜனாஸா எரிப்பை கண்டு கொள்ளாத அநுர இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறார் – அமீர் அலி

கொரோனா ஜனாஸாக்கள் எரிப்பதை தடுக்க முஸ்லிம் தலைவர்கள் பாராளுமன்றத்திலும் வெளியிலும் எதிர்ப்பை வெளியிட்ட போது எங்களோடு இணைந்து குரல் கொடுத்தவர்தான் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசா என முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசாவை ஆதரித்து ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில்,

பெரும்பான்மைக் கட்சித் தலைவர்கள், சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் எல்லோருமே சொன்னார்கள் ஜனாஸாக்களை எரிக்க வேண்டாம். அது தாங்கிக் கொள்ள முடியாத வேதனை. அது முஸ்லிம் சமூகத்துக்குச் செய்யும் பெரியதொரு அநியாயம் என்று கூறினார்கள்.

ஆனால், பாராளுமன்றத்தில் ஜே.வி.பி தலைவர் அநுர குமார திஸானாயக்க ஜனாஸாக்களை எரிப்பதா? இல்லையா? என்று எங்களால் ஒன்றும் சொல்ல முடியாது.

அரசாங்கம் எரிப்பது என்று தீர்மானித்தால் அதற்கு எங்களுக்கு தடையில்லை என்று சொன்னவர்தான் அவர்.

அன்று அவ்வாறு சொன்ன அநுர தற்போது வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக வேண்டி இந்தப் பிரதேசத்தில் வந்து நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.

அவருக்கு பின்னால் இளைஞர்களும், போராளிகளும் திறிகிறார்கள் என்றால் எங்கோ ஒரு பிரச்சினை இருக்கிறது.

ஜே.வி.பி. சொல்கிறார்கள் இந்த நாட்டிலுள்ள எல்லோருமே கள்ளர்கள் என்று. அவர்களை விட வல்லவர்கள் யாருமில்லை என்று சொல்கின்றனர்.

மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு அவர்கள் இந்த நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் என்று கனவு காண்கின்றார்கள்.

சில இளைஞர்கள் அவர்களின் சதி வலைக்குள் சிக்கியுள்ளனர்.

அரசியல் தலைவர்களுக்கிடையில் ஒரு அச்சமிருக்கிறது சஹ்ரான் மூளைச்சலவை செய்யப்பட்டு எப்படி ஒரு குண்டுதாரியாக வந்து முஸ்லிம் சமூகத்தை தலைகுணிய வைக்க அவனுக்கு தெரியாமலே அந்த வேலைத்திட்டம் செய்யப்பட்டதோ அது போல நமது இளைஞர்கள் வழிகெட்டு விடுவார்களோ என்ற அச்சம் எங்களிடத்தில் இல்லாமல் இல்லை.

அதனால்தான் நாங்கள் உங்களிடத்தில் சொல்கிறோம். நீங்கள் மிகவும் சிந்தனையோடு செயல்பட வேண்டிய நேரம் வந்திருக்கிறது.

இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மை கட்சிகள் சிறுபான்மாக் கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து சஜித் பிரமதாசாவுக்கு வாக்களிக்குமாறு சொல்கிறோம். என்றார்.

(எச்.எம்.எம்.பர்ஸான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *