உள்நாடு

சஜித் இன் வெற்றி விழாக் கொண்டாட்டத்தில் சந்திப்போம்

அநுராதபுரத்தில் றிஷாத்

“முஸ்லிம்கள் இல்லாவிட்டாலும், முஸ்லிம் எம்.பி. க்கள் இருக்கிறோம்’ என கோத்தாபய ராஜபக்ஷவின் அத்தனை அநியாயங்களுக்கும் தம்மை விட்டுச்சென்ற எம்.பி. க்கள் துணைபோனதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து, அநுராதபுரத்தில் (11) நடந்த பிரசாரக் கூட்டத்தில் மேலும் உரையாற்றிய அவர்,
“நீண்ட நாட்களுக்குப் பின்னர் இவ்வூரில் பேசக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். இதற்காக முதலில் இறைவனுக்கும், இரண்டாவதாக ஏற்பாட்டாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கின்றேன்.

நமது வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு வந்த இஷாக் ரஹ்மான், எமது சமூகத்துக்கு எதிரான கோத்தாபயவின் கொடூரச் செயல்களைக் கைகட்டிப் பார்த்து நின்றார். அரசியலமைப்பின் இருபதாவது திருத்தத்துக்கு இவர்கள் ஆதரவளித்ததால் தான், ராஜபக்ஷக்களின் கொடிய கரங்கள் மேலோங்கின.
‘அரசியலில் அவரை ஆதரிக்கவில்லை’ என்பதற்காக, எமது சமூகத்தைப் பழி வாங்கினார். முஸ்லிம்களின் சொத்துக்களையும் அழித்தனர். வியாபார நிலையங்களுக்குத் தீ வைத்தனர். கொரோனா ஜனாஸாக்களை எரித்து சந்தோசம் அடைந்தவர்களுடனேயே, இஷாக் ரஹ்மான் இணைந்துள்ளார். இதனால்தான், எமது கட்சியின் மூன்று எம்.பி. க்களையும் நீக்கினோம். இவர்களை ஒருபோதும் இணைக்கப் போவதில்லை. எனவே, இவர்களைத் தோற்கடிக்க ஒன்றுபடுங்கள்.

நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் மகனான சஜித் பிரேமதாஸ, தனது தந்தையைப் போன்று நேர்மையானவர். ஆடைத் தொழிற்சாலைகளை நிறுவி, இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கினார். ‘ஜனசவிய’ திட்டத்தின் மூலம் ஏழைக் குடும்பங்களுக்கு வாழ்வளித்தார்.

எனவே, சஜித்தின் வெற்றிக்கு உறு துணையாகச் செயற்படுங்கள்.
‘இன்ஷா அல்லாஹ்’ வெற்றி விழாக் கொண்டாட்டத்தில் சந்திப்போம்” என்று கூறினார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *