சஜித்துடன் எந்த விதமான இரகசிய ஒப்பந்தங்களும் இல்லை ; மறுக்கும் சுமந்திரன் எம்.பி.
“சஜித் பிரேமதாஸவுடன் எந்தவிதமான இரகசிய ஒப்பந்தங்களையும் செய்யவில்லை” என்று, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
“சஜித் பிரேமதாஸவை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்தபோது, உடன்பாடுகள் ஏதும் செய்யப்பட்டதா? அவ்வாறு செய்யப்படாமைக்கான காரணங்கள் என்ன?” என்று ஊடகவியலாளர்கள் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் ஊடகவியலாளர்களிடம் தெரிவிக்கையில்,
“இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, தென்னிலங்கை வேட்பாளர்களுடன் எந்தவிதமான எழுத்து மூலமான உடன்பாடுகளையும் இது காலவரையில் மேற்கொண்டதில்லை. அந்த வகையில், எமது நிலைப்பாடானது, ஜனாதிபதி வேட்பாளர்கள் அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட தமிழர்களின் விடயங்கள் தொடர்பில் பகிரங்கமாக தங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அறிவிக்க வேண்டும் என்பதே ஆகும்.
எம்மைப் பொறுத்தவரையில், தமிழ் மக்களுடன் உடன்பாடுகளை எட்டுவது, வாக்குறுதிகளை அளிப்பது போன்ற செயற்பாடுகளைத் தவிரவும் தங்களுடைய விஞ்ஞாபனங்களில் குறிப்பிட்டு, ஒட்டு மொத்தமான நாட்டுக்கும் கூற வேண்டும் என்பதே முக்கியமானது.
அந்த வகையில், சஜித் பிரேமதாஸ, அவரது நிலைப்பாட்டை, தனது தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளார். அதற்கு அமைவாகவே, நாம் சஜித்தை ஆதரிக்கும் முடிவினை எடுத்தோம்” என்றார்.
( ஐ. ஏ. காதிர் கான் )