உள்நாடு

நான் இன்னும் மொட்டுதான்; ஐக்கிய தேசியக் கட்சிக்குச் செல்லவில்லை – இப்படிக் கூறுகிறார் பிரசன்ன ரணதுங்க

“அநுர குமாரவின் ‘ஹெல்மெட் கும்பல்’ நாட்டில் அதிகாரம் பெற்றால், நாட்டில் 2022 ஆம் ஆண்டை விட அதிக இரத்தக்களரி ஏற்படும்” என, ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

“நாடு முன்னோக்கிச் செல்லும் ஒவ்வொரு முறையும் ஜனதா விமுக்தி பெரமுன நாட்டை பின்னோக்கி இழுக்கப் பாடுபடுகிறது” எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். “எனவே, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்” எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

திவுலப்பிட்டிய, கட்டான பிரதேசங்களில் நேற்று முன்தினம் (28) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “இது எங்களுக்கு ஒரு விசித்திரமான மேடை. ஏனெனில், இந்த மேடையில் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் உள்ளனர். அரசியலில் ஒருவரையொருவர் விமர்சித்துக் கொண்டோம். ஆனால், அந்தப் போட்டிகளை எல்லாம் விட்டுவிட்டு, ஒரே நோக்கத்திற்காக நாம் அனைவரும் ஒன்றாகப் பயணம் செய்கிறோம்.

பொருளாதார நெருக்கடியுடன் இந்த நாட்டில் புதிய அரசியல் கலாசாரம் உருவானது. நாங்கள் எரிபொருள் வரிசைகள், எரிவாயு வரிசைகளில் கஷ்டப்பட்டோம். அந்த கடந்த காலம் எங்களுக்கு நினைவில் உள்ளது. ஜனாதிபதியின் வெற்றிக்காகச் செயற்படுவதால், தற்போது பிரசன்ன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாக சிலர் கூறுகின்றனர். இல்லை. நான் இன்னும் மொட்டில் தான் இருக்கிறேன்.

இன்று மஹிந்தவின் மேடையில் வாய்ச் சவால் விட ஏராளமான வீரர்கள் உள்ளனர். ஆனால், 2015 இல் அவர் தோற்றபோது, அங்கு யாரும் அவருடன் இல்லை. அவரை மீண்டும் அரசியலுக்குக் கொண்டு வர, நான்தான் முன்னின்று செயல்பட்டேன்.

‘மேல் மாகாண முதலமைச்சர்’ என்ற வகையில், எனது உத்தியோகபூர்வ இல்லத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. எமது தியாகத்தினால் தான் ஜனாதிபதியை நியமித்து மொட்டுக் கட்சி அரசாங்கத்தை அமைக்க முடிந்தது.

இந்த நாட்டை எப்போதும் பின்னோக்கிக் கொண்டு சென்றது ஜே.வி.பி தான். 2022 ஆம் ஆண்டு வீடுகளுக்குத் தீ வைத்து, அதன் கொடூரத்தை நாட்டில் விதைத்ததும், அனுரகுமார திஸாநாயக்கவின் தலைக்கவச கும்பல்தான். இவ்வாறானதொரு குழுவிற்கு அதிகாரம் வழங்கப்படுமானால், இந்த நாட்டில் மீண்டும் இரத்தக்களரி ஏற்படும். எனவே, இம்முறை மிகவும் கவனமாக வாக்களிக்க வேண்டும். ‘தனது 3 சதவீத வாக்குகள் 40 – 50 சத வீதமாக அதிகரிக்கும்’ என அனுர குமார நினைக்கிறார். அது நடக்காது. ஒரு வாக்கு பெற நாம் எவ்வளவு சாக வேண்டும் என்பது, அரசியல் வாதிகளாகிய எங்களுக்குத் தெரியும்” என்றார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *