உள்நாடு

சஜித் பிரேமதாஸவின் அரசில் ஜனாதிபதி மாளிகை பல்கலைக் கழகமாக மாறும்; ஹரீஸ் எம்.பி நம்பிக்கையுடன் தெரிவிப்பு

“சஜித் பிரேமதாஸ தலைமையிலான அரசு வந்தால், கொழும்பில் இருக்கும் மிக ஆடம்பர மாளிகையான ஜனாதிபதி மாளிகையை பல்கலைக் கழகமாக மாற்றுவேன்” என்கின்ற நல்லெண்ணத்துடன் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ இருக்கிறார் என, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

பொத்துவிலில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், “இந்த மண்ணில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் விளையாட்டுக்களை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு, பொத்துவில் மண்ணுக்கான நிரந்தரத் தீர்வைப் பெற வேண்டுமானால், இந்த மண்ணுடைய தாகமாக இருக்கின்ற பொத்துவில் வலயக் கல்விப் பணிமனையை 22 ஆம் திகதி ஜனாதிபதியாக மாறுகின்ற பொழுது சஜித் பிரேமதாஸ நிச்சயமாக உருவாக்கித் தருவார்.

அதேபோன்று, பொய் கூறித் தெரிகின்ற ‘முகுது மகா விகாரை வர்த்தமானி’ விவகாரம் நூற்றுக்கு 200 வீதம் பொய்யாகும். பொத்துவில் மண்ணை சிறைப்பிடித்து விட்டு, நம் மண்ணில் பொய் கூறித் திரிகின்றார்கள். எல்லாப் பிரச்சினைகளுக்குமான தீர்வை சஜித் ஜனாதிபதியானதும் பெற்றுத் தருவார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, அவர்கள் பதவியில் இருக்கின்ற அந்த ஐந்து வருடத்தில் ஐந்து கோடி ரூபா பெறுமதியான வாகன உறுதிப் பத்திரம் கொடுப்பார்கள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அந்த உறுதிப் பத்திரத்தை, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் கொடுப்பதற்கு அமைச்சரவையில் பத்திரம் சமர்ப்பித்து இருந்தார். அப்பொழுது அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டது, வாகன உறுதிப் பத்திரத்தை ஆளும் கட்சி எம்.பி. மார்களும் கேட்டு இருக்கின்றார்கள், எதிர்க்கட்சியில் இருக்கின்ற எம்.பி மார்கள் கேட்டிருக்கின்றார்கள்.

இது சம்பந்தமாக, எதிர்க்கட்சித் தலைவர் ஒரு ஒப்புதல் வழங்குகின்ற போதுதான் தீர்மானம் எடுக்க முடியும் என்று, அமைச்சரவை தீர்மானித்த பொழுது. எங்களுடைய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு அவருடைய கட்சியில் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் பல அழுத்தங்களைக் கொடுத்த போதிலும், அந்த அழுத்தத்திற்கு அடி பணியாமல் இந்த வாகன பேமிட்டுக்கு நான் ஒப்புதல் வழங்க மாட்டேன் என்று அந்த தீர்மானத்தை எடுத்தவர் தான், எங்கள் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ.” என்றார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *