விளையாட்டு

குசல் மற்றும் விஷ்வ நீக்கம்; பெத்தும் மற்றும் லஹிருக்கு வாய்ப்பு; இன்று 2ஆவது போட்டி லோட்ஸில்

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு உலகப்புகழ் பெற்ற லோர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இப் போட்டியில் இலங்கை அணி முதல் போட்டியில் பங்கேற்ற அணியிலிருந்து 2 மாற்றங்களை செய்து களம் காணுகின்றது.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக இடம்பெற்றுவரும் இவ்விரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களால் வௌற்றி பெற்று தொடரில் 1:0 என முன்னிலை பெற்றுள்ளது. அதற்கமைய தீர்மானமிக்க 2ஆவது போட்டி இன்று (29) ஆரம்பிக்கின்றது.

இப் போட்டியில் இலங்கை அணி இங்கிலாந்து அணிக்கு பதிளடி கொடுத்து இத் தொடரை சாதகமாக்கிக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மேலும் இன்றைய தினம் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் முதல் போட்டியில் பங்கேற்ற அணியிலிருந்து இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி துடுப்பாட்டத்தில் சொதப்பிய குசல் மெண்டிஸ் மற்றும் பந்துவீச்சில் சொதப்பிய விஷ்வா பெர்னாண்டோ ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்களுக்கு பதிலாக முன்வரிசைத் துடுப்பாட்ட வீரரான பெத்தும் நிஸ்ஸங்க மற்றும் வலதுகை வேகப்பந்து வீச்சாளரான லஹிரு குமார ஆகியோர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். மேலும் லோர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி, அதில் எதிலும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பதினொருவர் குழாம்

திமுத் கருணாரத்ன, நிஷான் மதுஷ்க, பெத்தும் நிஸ்ஸங்க, அஞ்சலோ மெத்தியூஸ், தினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா, கமிந்து மெண்டிஸ், பிரபாத் ஜயசூரிய, அசித பெர்னாண்டோ, லஹிரு குமார , மிலன் ரத்நாயக்க

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *