உள்நாடு

பிரேமதாஸாக்கள் செய்வதாகச் சொன்ன விடயங்களைச் செய்யாமல் இருந்ததில்லை; எனது தந்தையான ரணசிங்க பிரேமதாஸவின் நாமத்தால் நான் சொல்வதைச் செய்வேன்; சஜித் பிரேமதாஸ திட்டவட்டம்

“அரச ஊழியர்களின் வாழ்க்கைச் செலவுக்கேற்ப, சம்பளம் வழங்குவது தொடர்பாக ஆராய்வதற்கு, பூரண அதிகாரத்துடன் கூடிய ஆனைக்குழு ஒன்று நிறுவப்படும். அரச ஊழியர்களின் சம்பளத்தை 24 வீதத்தால் அதிகரிப்பதோடு, அரச ஊழியர்களுக்கான வரியைக் குறைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்புக் கணக்குகளுக்கு, இதற்கு முன்னர் வழங்கப்பட்டதைப் போன்று 15 வீத வட்டியை, சேமிப்பு வட்டி வீதமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இன்று 15 வீத வட்டியுடன் கூடிய இலட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. ஓய்வூதியதாரர்கள் ஏமாற்றப்பட்டாலும், தாம் அவர்களை ஏமாற்றப் போவதில்லை. 2016 ஆம் ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்ற அனைவருக்கும் ‘அக்ரஹார’ காப்புறுதித் திட்டத்தை முன்னெடுப்போம்.

2016 – 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஓய்வு பெற்றவர்களுக்கு இந்தச் சலுகையை கோத்தாபய ராஜபக்ஷ இல்லாமல் செய்துள்ளார். அதனை மீண்டும் வழங்குவோம். ஓய்வு பெற்றவர்களின் சலுகைகளை உயர்ந்த தரத்தில் பேணும் பொருட்டு, 1999 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க சட்டத்தைத் திருத்துவதன் மூலம், புதியதொரு சட்ட மூலமொன்றும் கொண்டு வரப்படும். சிரேஷ்ட பிரஜைகளுக்காக வழங்கப்படுகின்ற 3,000 ரூபா கொடுப்பனவை 5,000 ரூபாவாக அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நம்பிக்கை தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு, ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த பன்னிரெண்டாவது மக்கள் பேரணி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில், கண்டி திகன பிரதேசத்தில் மிக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து பேசும்போது, “இராணுவ வீரர்களுக்காக ‘One rank one pay’வேலைத் திட்டத்தையும் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள சம்பள முரண்பாட்டுப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவை பொய்யான வாக்குறுதிகள் அல்ல. இது முன் மொழிவும் திட்டங்களும் ஆகும். பிரேமதாஸாக்கள் செய்வதாகச் சொன்ன விடயங்களைச் செய்யாமல் இருந்ததில்லை. எனது தந்தையான ரணசிங்க பிரேமதாஸவின் நாமத்தால், நான் சொல்வதைச் செய்வேன்” என சுட்டிக்காட்டினார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *