உள்நாடு

அளவுக்கு மீறி கட்சி காட்டுப்பாட்டை மறந்தால் நான் கடுமையாக பிரம்பை எடுக்க வேண்டி வரும்; ரவூப் ஹக்கீம்

சஜித் பிரமதாசவை ஜனாதியாக வெற்றிபெற வைக்க வேண்டும் என்று முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம் எடுத்த பின்னர் அதில் மறைந்து விளையாடுவதற்கு யாருக்கும் இடம் கிடையாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஏறாவூரில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.தொடர்ந்தும் அவர் பேசுகையில், நாங்கள் சமூகம் சார்ந்த பல காரணங்களை முன்வைத்து சஜித் பிரமதாசாவை ஆதரிக்கின்றோம். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு பலமான கட்சியாகும் அதற்கு கட்டுப்படாதவர்களை நாங்கள் தூக்கி எறிவதற்கு தயங்க மாட்டோம்.

இந்த தேர்தலில் நாங்கள் அவ்வாறானவர்காளின் செயற்பாடுகளை மிக கூர்மையாக அவதானிப்போம். பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தொடர்பாக ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவிக்கையில், கட்சியின் தீர்மானத்துக்கு மாற்றமாக நடப்பவர்கள் மீது நான் மிகவும் இறுக்கமாக இருப்பேன்.

எனது அன்பு, பாசத்திற்கு ஒரு அளவு உள்ளது. அளவு மீறி கட்சி காட்டுப்பாட்டை மறந்தால் நான் கடுமையாக பிரம்பை எடுக்க வேண்டி வரும். பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தாமதித்து வந்தமைக்கான ஒரு காரணத்தை சத்திய கடாதாசி மூலம் தந்திருக்கிறார்.அதை நான் உச்ச பீடத்துக்கு சமர்ப்பித்துதான் அவரின் இடைநிறுத்தத்திற்கான நீக்கலை சிந்தித்தோம்.

கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அவர் உத்தரவாதம் தந்துள்ளார். மிக இறுக்கமாக சொல்கிறேன். இனி ஒருவருக்கும் பயப்படுவதற்கு நான் தயாரில்லை. இந்த தேர்தலில் அவர்கள் எப்படி நேர்மையாக செயற்படுகிறார்கள் என்பதை பொறுத்துத்தான் அடுத்த கட்ட அவர்களுடைய அரசியலுக்கான அங்கீகாரத்தை கட்சி தலைமை வழங்கும்.

சஜிதுக்கு பயந்து நான் இந்த தீர்மானத்துக்கு வரவில்லை. போராளிகளின் ஆத்திரத்துக்கு நான் பதில் சொல்லியாக வேண்டும். அவர்களின் ஆத்திரத்தை சம்பாதித்தவர்கள் யாராக இருந்தாலும் சரி அதற்கு பின்னர் கட்சியில் நீடிக்க முடியாது.

நாங்கள் அமைச்சுப் பதவிகள் கேட்டோ, தேசியப் பட்டியல் கேட்டோ சஜித் பிரமதாசாவுக்கு ஆதரவு வழங்கவில்லை. அவர் இனவாதம் இல்லாத ஒரு தலைவராக காணப்படுகிறார். எங்களது கட்சி பலமாக இருக்கும் போது நாங்கள் பிச்சை வாங்க வேண்டிய அவசியம் இல்லை.

அடுத்த அரசாங்கத்தில் எனக்கு அமைச்சுப் பதவி இல்லாமல் வந்தாலும் ஒரு பலமான அரசியல் தலைமையாக என்னால் செயற்பட முடியும் என்றார்.

 

(எச்.எம்.எம்.பர்ஸான்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *