உள்நாடு

வாக்காளர் அட்டைகள் விநியோகம் செப்டம்பர் 3 முதல்..! -பிரதித் தபால் மா அதிபர்

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகம், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என, பிரதித் தபால் மா அதிபர் ராஜித்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி விசேட தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விடுமுறை தினமான (08) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை, இந்த விநியோகம் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் வீட்டிலேயே தங்கி, உரிய வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் மக்களிடம் வேண்டுகோள் ஒன்றை முன் வைத்துள்ளார்.
இதேவேளை, வீடு வீடாகச் சென்று வாக்காளர் அட்டைகளை விநியோகம் செய்யும் நடவடிக்கை, செப்டம்பர் 14 ஆம் திகதியுடன் முடிவடையும் என்றும், அதன் பிறகு வீடு வீடாகச் சென்று வாக்காளர் அட்டைகள் விநியோகம் நடைபெறமாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தேர்தல் நாள் வரை காத்திராமல், கடிதங்களைப் பெறும் தபால் நிலையத்திற்குச் சென்று, சாதாரண நேரங்களில் தனது அடையாளத்தை உறுதிப்படுத்தி, தனது கையொப்பத்தைப் பயன்படுத்தி, தனக்குச் சொந்தமான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
மேலும், இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 17,140,280 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 1,148,258 பேர் புதிய வாக்காளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *