உள்நாடு

ரணில் இத்துப்போன காஸ் சிலிண்டர்..! -முஜீபுர் ரஹ்மான் எம்.பி. கிண்டல்

“நாட்டை வீழ்ச்சியடையச் செய்த மொட்டுக் கட்சிக் காரர்களுடன் இணைந்து தேர்தலில் வெற்றிபெற முடியும் என்றே ரணில் விக்கிரமசிங்க நினைத்தார். ஆனால் தற்போது நாமல் ராஜபக்ஷ் மொட்டுக் கட்சியில் போட்டியிடுவதால், அவருக்கு வெற்றிபெறுவது நம்பிக்கை இல்லாமல் போயுள்ளது. அதனால், ஐக்கிய மக்கள் சக்தியைப் பிளவுபடுத்த முயற்சிக்கிறார். ரணில் விக்கிரமசிங்க இத்துப்போன ஒரு காஸ் சிலிண்டர். அதில் மீண்டும் காஸ் நிரப்ப முற்பட்டால் வெடித்துச் சிதறிவிடும்” என, ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் கிண்டல் செய்து பேசினார்.
ருவன்வெல்ல பிரதேசத்தில் (18) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் தற்போது கட்சியின் ‘யானைச் சின்னம்’ இல்லை. ‘காஸ் டாங்கி’ யே இருக்கிறது.
அந்த ‘காஸ் டாங்கி’ இத்துப்போனதாகும். அதனால், அதில் ஒரு மாதத்துக்கு மேல் ‘காஸ்’ நிரப்ப முடியாது. அதில் ‘காஸ்’ நிரப்ப முற்பட்டால், அது வெடித்து சிதறிவிடும்.
ரணில் விக்கிரமசிங்கவை விற்பனை செய்ய, நாங்கள் 30 வருடங்களாக முயற்சித்தோம். ஆனால், எங்களால் அவரை விற்பனை செய்ய முடியாமல் போனது. ரணில் விக்கிரமசிங்க என்பவர், தற்போது காலாவதியான ஒரு பொருள். அதனை நாங்கள் தெரிந்து கொண்டதால்தான், சஜித் பிரேமதாஸ தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கி, மக்கள் முன்வர நேர்ந்தது.
ரணில் விக்கிரமசிங்க, தற்போது மக்களால் வெறுக்கப்பட்ட, மக்கள் நிராகரித்த குழுவைக் கொண்டுவர முயற்சிக்கிறார். மொட்டுக் கட்சியைப் பிளவுபடுத்தி, அதில் இருந்து ஒரு குழுவைத் தன் பக்கம் ரணில் விக்கிரமசிங்க இழுத்துக்கொண்டுள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழித்து, நாட்டை வீழ்ச்சியடையச் செய்த மொட்டுக் கட்சிக் காரர்களுடன் இணைந்து, தேர்தலில் வெற்றிபெற முடியும் என்றே, ரணில் விக்கிரமசிங்க நினைத்தார்.
ஆனால், தற்போது நாமல் ராஜபக்ஷ் மொட்டுக் கட்சியில் போட்டியிடுவதால், அவருக்கு வெற்றுபெறுவது நம்பிக்கை இல்லை. அதனால், ஐக்கிய மக்கள் சக்தியைப் பிளவுபடுத்த முயற்சிக்கிறார்.
ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. க்களை, பணத்துக்கும் வேறு வரப்பிரசாதங்களையும் வழங்கி, தன் பக்கம் இழுத்துக்கொண்டாலும், மக்கள் சஜித் பிரேமதாஸவுடனேயே இருக்கின்றனர் என்பதை, ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெரிவித்துக்கொள்கின்றேன்.
ரணில் விக்கிரமசிங்க, அனைத்துக் கட்சிகளில் இருந்தும் உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கி, தற்போது சாம்பார் கூட்டணி ஒன்றை அமைத்திருக்கிறார். அந்தக் கூட்டணியில் ‘மோசடிக் காரர்கள், தரமற்ற மருந்து கொள்வனவு செய்தவர்கள். வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் கப்பம் கேட்டவர்கள்,
வெள்ளைப் பூண்டு மோசடி செய்தவர்கள், தங்கம் கடத்தியவர்’ என, அனைத்து தரப்பினரும் இருக்கின்றனர்.
செப்டம்பர் 21 ஆம் திகதிக்குப் பின்னர், இவர்கள் அனைவரையும் சட்டத்துக்கு முன் நிறுத்துவோம். இவர்களுடன் இணைந்து, நாட்டைக் கட்டியெழுப்புவதாக, ரணில் விக்கிரமசிங்க தெரிவிக்கிறார்.
ஆனால், இவர்கள்தான் நாட்டை வீழ்ச்சியடையச் செய்தவர்கள். அதனால், நாட்டைக் கட்டியெழுப்ப முடியுமான அணி இருப்பது, சஜித் பிரேமதாஸவுடனாகும்.
எமது அணிக்கே, நாட்டில் ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப முடியும். அதனால், சஜித் பிரேமதாஸவை வெற்றி பெறச் செய்ய, மக்கள் அணி திரள வேண்டும்” என்றார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *