உள்நாடு

புத்தளத்தில் கைதான இந்திய மீனவர்கள் 22 பேருக்கும் தொடர்ந்து விளக்கமறியல்

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கற்பிட்டி வடக்கு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்களையும் அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட நீதிவான் இன்று (20) உத்தரவிட்டுள்ளார்.

இரண்டு படகுகளில் தமிழகம் – தூத்துக்குடியில் இருந்து வந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த இந்திய மீனவர்கள் 22 பேரும் எல்லை தாண்டி புத்தளம் – கற்பிட்டி வடக்கு கடற்பகுதியில் மீன்பிடியில். ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கடந்த 5 ஆம் திகதி இரவு கடற்படையிரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த இந்திய மீனவர்கள் பயணித்த இரண்டு விசைப் படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு கைது செய்யப்பட்ட 22 மீனவர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அவர்கள் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். சட்டவிரோதமாக இலங்கை எல்லைக்குள் நுழைந்தமை தொடர்பில் இந்த 22 இந்திய மீனவர்களுக்கும் எதிராக வழக்குத் தொடரப்பட்டது.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் சார்பில் இந்திய உயர் ஸ்தானிகரின் வேண்டுகோளின் பேரில் சட்டத்தரணிகளான பாரிஸ் மரிக்கார் மற்றும் அபுஹர் மொஹமட் அஸ்பர் ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

இரு பிரிவுகளாக எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கில் முதலில் 12 பேரும், பின்னர் 10 பேரும் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது சந்தேக நபர்களான இந்திய மீனவர்கள் 22 பேரையும் இன்று (20) வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், சந்தேக நபர்கள் மீண்டும் இன்று (20) புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, சந்தேக நபர்களான 22 இந்திய மீனவர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

(ரஸீன் ரஸ்மின்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *